அஜீத் படத்தை தடுத்த ஈழத் தமிழர்கள்!

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள முடியாது என்ற ரீதியில் அஜீத்தும், அர்ஜூனும் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை அஜீ்த் திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும் இந்தச் செய்தியால் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இரு நடிகர்களின் படங்களையும் பார்க்க மாட்டோம், திரையிடவும் விட மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந் நிலையில்அஜீத் நடித்துள்ள ஏகன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது.
ஆனால் படத்தை திரையிடக் கூடாது என ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மூன்று நாடுகளிலும் ஒரு இடத்திலும் ஏகன் திரையிடப்படவி்ல்லை.
அதேசமயம், ஈழத் தமிழர்களின் தாயகமான இலங்கையில் ஏகன் திரையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏகன் திரையிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஈழத் தமிழர்கள்தான். இவர்கள் ஆதரவு தெரிவித்தால்தான் தமிழ்ப் படம் எதுவும் வெற்றிப் படமாக முடியும். வெளிநாடுளில் தமிழ்ப் படம் ஒன்றின் வெற்றி, தோல்வியை நிர்ணயி்ப்பது ஈழத் தமிழர்கள்தான் என்ற நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் படத்துக்கு 3 நாடுகளில் ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகர் ஒருவரின் படம் ஒன்றை ஈழத் தமிழர்கள் தடுத்து நிறுத்தியிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











