5 நாட்கள்... 5000 ரசிகர்களுடன் படமெடுத்துக் கொண்ட ரஜினி!
ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள சாலை திருவிழாக் களை கட்டியிருந்தது கடந்த 5 நாட்களாக. ஒரு மாவட்டத்திலிருந்து ரஜினியைச் சந்திக்க 300 பேர் பஸ்கள், வேன்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள் என்றால், அதே மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் சொந்த வாகனங்களில் வந்து குவிந்தார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்த அருகிலிருந்த ஒரு பள்ளி வளாகத்தை பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நாளொன்றுக்கு மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கிட்டத்தட்ட 1000 பேர். இவர்கள் பெரும்பாலும் மன்றத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

இந்த முதல் கட்ட சந்திப்பில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 ரசிகர்கள் கலந்து கொண்டு படமெடுத்துக் கொண்டனர்.
தினசரி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 12 மணி வரை படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது.
வந்த அனைத்து ரசிகர்களுக்கும் குளிர்ந்த குடிநீர், மோர் முதலில் வழங்கப்பட்டது. படம் பிடித்துக் கொண்டவர்கள் இடது பக்க வாயிலில் இறங்கி, கீழே உணவருந்தும் ஹாலுக்கு சென்று உணவு அருந்திய பிறகே செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தனர்.
4வது நாளிலும், இறுதி நாளான நேற்றும் மட்டும் 300 செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ பதிவாளர்கள் ரஜினியுடன் படமெடுத்துக் கொண்டனர். ஏராளமான போலீசாரும் தாங்களும் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பியதால் அவர்களையும் ரஜினி அனுமதித்தார்.
மொத்தம் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இந்த முதல்கட்ட சந்திப்பில் ரஜினி படம் எடுத்துக் கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் அரங்கில் ஒரு நடிகரோ அல்லது தலைவரோ இவ்வளவு பேர்களுடன் தனித் தனியாக படமெடுத்துக் கொண்டது இதுவே முதல்முறை.
அடுத்த கட்டமாக மேலும் 15 மாவட்ட ரசிகர் மன்றத்தினரை அடுத்த மாதம் ரஜினி சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய ரஜினி ரசிகர்கள் தலைமை மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











