கம்பி கட்ற கதையா சொல்றாங்க.. 20 லட்சம் வாக்குகள்தானா?.. விஜய்க்கு சப்போர்ட் செய்யும் நட்டி நட்ராஜ்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் 84.69 சதவீத வாக்குகள் நேற்று பதிவாகியிருந்தன. வாக்கு சதவீதம் இவ்வளவு அதிகரித்ததற்கு விஜய்யின் அரசியல் வருகைதான் காரணம் என்று தவெகவினர் கூறினார்கள். ஆனால் இந்த வாக்கு சதவீத உயர்வுக்கு SIR விஷயம்தான் முக்கியமான காரணம் என்றும் விஜய்க்கு எதிர் தரப்பினர் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அரசியல் பிரவேசம் செய்து முதல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்துவிட்டார். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்பது விஜய்யின் முழக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் திமுகவின் முக்கிய தலைகளோ பரப்புரையில் விஜய் பெயரைகூட உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது அரசியல் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதோ என்ற அச்சத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம்: இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடம் ஆர்வம் இருந்ததாகவே தெரிந்தது. மொத்தம் 84.69 விழுக்காடு வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகின. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறைதான் இவ்வளவு வாக்குகள் வந்திருக்கிறது. அதனை நினைத்து அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் இந்த வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு விஜய்யின் அரசியல் வருகைதான் காரணம் என்றும் தவெகவினர் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
உண்மை அது இல்லையா?: அதேசமயம் தவெகவினரின் அந்தக் கருத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள். அவர்களோ, இந்த வாக்கு சதவீத உயர்வுக்கு விஜய் காரணமில்லை. SIR விஷயம்தான் காரணம். சென்னையிலேயே மொத்தம் 23.69 லட்சம் வாக்குகள்தான் விழுந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே மொத்தம் 20லிருந்து 30 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக விழுந்திருக்கின்றன. எனவே இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விழுக்காடு ஏன் அதிகரித்தது?: அதுமட்டுமின்றி சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 40.4 லட்சமாக இருந்தது. SIRக்கு பிறகு அந்த எண்ணிக்கை 28.30 லட்சமாக குறைந்ததே வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்ததால்தான் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மொத்தமே இந்தத் தேர்தலில் 20 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ஒரு வாதமும் எழுந்திருக்கிறது.
நட்டி நட்ராஜின் பதிவு: இப்படி வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு சதவீதத்தை வைத்து தவெகவினருக்கும், மற்ற கட்சியினருக்கும் இடையே சோஷியல் மீடியாவில் பெரிய விவாதங்களே போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், '20 லட்சம் மட்டும்தான் என சொல்பவர்களுக்கு' என்று குறிப்பிட்டு தான் நடித்திருக்கும் கம்பி கட்ற கதை பட போஸ்டருடன் ஷேர் செய்து விஜய்க்கு தனது ஆதரவை கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications