'என் வாழ்வை மாற்றிய அந்த ஏழு நாட்கள்'... மனம் திறக்கும் நடிகர் ஆரி! Exclusive
ஜல்லிக்கட்டு போராட்ட நாட்கள் தான் தன் வாழ்வை மாற்றியவை என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான் தன் வாழ்வை மாற்றின என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆரி. இயற்கை விவசாயம், தமிழ் வளர்ச்சி என பல்வேறு சமூக நலன் சார்ந்த விஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தனது கையெழுத்தை தமிழில் மாற்றியது மட்டுமல்லாமல், பலரையும் தங்கள் கையெழுத்தை தமிழில் மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ஆரியை சந்தித்தோம்.
அவர் பேசியதில் இருந்து...

என்ன திடீர்னு மாறுவோம் மாற்றுவோம் பரபரப்பு கிளப்பிட்டு இருக்கீங்க....
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தான் இந்த அமைப்பை நாங்க தொடங்கினோம். இயற்கை விவசாயம், மாடித் தோட்டம்னு செஞ்சிட்டு இருந்தப்போ தமிழ் வளர்ச்சிக்காக ஏதாவது செய்யனும்னு தோணுச்சு. அப்புறம் தான் தமிழில் கையெழுத்து போடுவதற்கான திட்டங்களை வகுப்பு செயல்படுத்திட்டு இருக்கோம்.

தமிழில் கையெழுத்து போடுவதால் மட்டும் தமிழ் வளர்ச்சி அடைந்திட முடியுமா...
இது நம் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சி. தமிழ் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பலரும் தங்கள் கையெழுத்தை ஆங்கிலத்தில்தான் போடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போதும், தமிழில் கையெழுத்து போட அவர்களை மாற்றுவதே பெரிய விஷயம் தான்.

முழு நேரமும் சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கீங்களே, இப்போ நடிக்கிறது எல்லாம் இல்லையா...
நடிப்பு என் தொழில். அது ஒரு பக்கம் போயிட்டு தான் இருக்கு. எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னு ஒரு படம் பண்றேன். வி.இசட்.துரை இயக்கத்தில் ஒரு என மொத்தம் நான்கு படங்கள் பண்ணிட்டு தான் இருக்கேன். அதுலயும் நிச்சயம் சாதிப்பேன்.

ஒரே நேரத்தில் இப்டி ரெண்டு டிராக்ல பயணிக்கிறது சிரமமாக இல்லையா...
முதல்ல நானும் எல்லோரைப் போலவும் சாதாரணமா தான் இருந்தேன். மெரினால நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என் வாழ்க்கைய புரட்டி போட்டுச்சு. அந்த ஏழு நாட்கள் என் வாழ்க்கையில மறக்க முடியாதவை. பசிக்கும் போது யாராவது வந்து சோறு கொடுத்தாங்க. தாகம் எடுக்கும் போது தண்ணீ கொடுத்தாங்க. மனிதத்தை அங்கு தான் கத்துக்கிட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அந்த கடைசி நாள் நடந்த நிகழ்வுகள் மரண பயத்தை உருவாக்குச்சு. அரசியலையும் அந்த போராட்டம் தான் கத்துக்கொடுத்துச்சு. இப்போ தெளிவா இருக்கேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











