அப்பாஸுக்கு நேர்ந்த விபத்து.. த*கொலை எண்ணமும் கூடவே.. ஒரே அழுகை.. இவ்வளவு கஷ்டமா?
சென்னை: காதல் தேசம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து நடித்த விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது மார்க்கெட் திடீரென சரிந்தது. அதனையடுத்து நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆன அவர்; இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
கதிர் இயக்கிய காதல் தேசம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். முதல் படமே கல்லூரி காதல் கதை என்பதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கதிர் இயக்கத்தாலும் மெகா ஹிட்டானது. குறிப்பாக அப்பாஸுக்கென்று பெண் ரசிகைகளும் உருவாக தொடங்கினார்கள். கண்டிப்பாக தவிர்க்க முடியாத சாக்லேட் பாயாக வலம் வருவார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அதன்படிதான் அவருக்கு வாய்ப்புகளும் கொட்டி கிடைத்தன.

சரிந்த மார்க்கெட்: ஹீரோவாக கலக்கிக்கொண்டிருந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக கேரக்டர் ரோலுக்கு ஷிஃப்ட் ஆனார். அப்படி அவர் நடித்த படையப்பா, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களும் நல்ல பெயரையே பெற்றாலும்; அப்பாஸுக்கு மார்க்கெட் சுத்தமாக காலி ஆனது. இதனையடுத்து ஆளே காணாமல் போய்விட்டார். வெளிநாட்டுக்கு சென்று அங்கே சில வேலைகளை பார்த்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.
மீண்டும் வந்த அப்பாஸ்: நிலைமை இப்படி இருக்க இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் ஹேப்பிராஜ் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து கோலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கிறார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அப்பாஸின் வருகை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இனி பல படங்களில் அவர் முக்கியமான ரோலை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பாஸ் பேட்டி: இந்நிலையில் அப்பாஸ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பைக் விபத்து ஏற்பட்டது. அதில் எடுத்துக்கொண்ட மருந்துகளில் கெமிக்கல் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக த*கொலை எண்ணம், பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்டவையும் எனக்கு உருவானது. வீட்டு பக்கத்தில் இருக்கும் மரங்களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருப்பேன்.
யாருமே உதவி இல்லை: எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை. எனக்கு நானே உதவி செய்யும் நிலைமைதான் இருந்தது.எனக்கு ஒரு கவுன்சிலிங் கொடுக்கும் ஒருவர் இருந்தார். அவர் என்னிடம் நீங்கள் நடிகராக இருப்பதால் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டார். எனக்கு ஈகோ முற்றி சண்டை போட்டேன். ஆனால் மறுநாளே மீண்டும் அந்த செஷனுக்கு சென்றேன். இன்று நடிகருக்கு ரெட் கார்ப்பெட் எல்லாம் போடமாட்டார்கள்.
உங்களுக்கு கேமரா முன் நிற்பது பிடிக்கும் என்றால் உங்கள் ஃபோனை எடுத்து உங்களையே படம்பிடித்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வீடியோ போடுங்கள் என சொன்னார். பிறகு நானும் அப்படி வீடியோ போட்டேன். எனக்கு அந்த நேரத்தில் மண்டை ஒழுங்காக வேலையும் செய்யவில்லை. இப்போது நான் அப்படி செய்திருக்கவே மாட்டேன். ஆனால் அந்த வீடியோ போட போட எனக்கு பலம் வந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
