அருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்!
நடிகர் அருள்நிதியின் அடுத்தப் படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரிக்கிறது.
சென்னை: நடிகர் அருள்நிதியின் அடுத்தப் படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. வம்சம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, மௌனகுரு, டிமாண்டி காலனி உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரு.பழனியப்பன் இயக்கும், 'புகழேந்தி எனும் நான்' படத்தில் அருள்நிதி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இந்நிலையில் அவரது அடுத்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் இப்படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 2 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறுது.
படம் பற்றி எஸ்பி சினிமாஸ் சங்கர் கூறுகையில், "அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும் போது அவர் காட்டிய பேரார்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. நல்ல தரமான கமெர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம்" , இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











