நான் இறந்தால் பாலாதான் காரணம்.. மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட முன்னாள் மனைவி
சென்னை: சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் மலையாளத்தில் பல படங்களில் நடித்து ஃபேமஸ் ஆகியிருக்கிறார். அவருக்கு மொத்தம் நான்கு திருமணங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது மூன்றாவது மனைவி என்று சொல்லப்படும் மருத்துவர் எலிசபெத், 'தான் இறந்தால் பாலாதான் காரணம்' என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். அவர் தமிழில் அன்பு, காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாக அவர் நடித்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. எனவே மலையாளத்தில் கவனம் செலுத்திய அவர்; அங்கு தனக்கென சொல்லிக்கொள்ளும்படியான மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொண்டார்.
மீண்டும் தமிழில்: மலையாளத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த அவர்; தனது சகோதரர் இயக்கிய வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்தார். அதன் மூலம் ஓரளவுக்கு கவனம் ஈர்த்தார். அதனையடுத்து அண்ணாத்த படத்திலும் ஒரு கேரக்டரை அவர் ஏற்றிருந்தார். அதற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஒருவழியாக மீண்டு வந்துவிட்டார்.

நான்கு திருமணங்கள்?: இதற்கிடையே பாலாவுக்கு மொத்தம் நான்கு திருமணங்கள் என்று சொல்லப்படுகிறது. முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து சில காலம் வாழ்ந்துவிட்டு பிரிந்த அவர்; அடுத்ததாக அம்ருதா என்பவரை திருமணம் செய்தார். அதிலிருந்தும் வெளியே வந்த அவர்; மூன்றாவதாக எலிசபெத்தை திருமணம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதனை பாலா மறுத்துவிட்டார். பிறகு தனது உறவினர் மகளான கோகிலாவை திருமணம் செய்தார்.
எலிசபெத் வீடியோ: இந்நிலையில் மூன்றாவது மனைவி என்று சொல்லப்படும் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "மருத்துவமனையில் இருந்தபடி நான் வீடியோ எடுக்க விரும்பவில்லை. இருப்பினும் என்னால் நிறைய விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
திருமணமே ஆகவில்லையா?: எனக்கும் அவருக்கும் திருமணமே ஆகவில்லை; அது அனைத்துமே என்னுடைய கற்பனை என்று சொல்கிறார்கள். அப்படியெனில் அவர் ஏன் என்னை மனைவி என்று அனைவரது முன்னிலையிலும் அறிமுகப்படுத்த வேண்டும். ஒருவேளை நான் உயிரிழந்தால் அதற்கு பாலாதான் முழு பொறுப்பு. காவல் துறையிடம் இதுகுறித்து புகாரளித்தேன். ஆனால் அவர்கள் அந்தப் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.
முதலமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்: இதுகுறித்த புகாரை முதலமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன். அதனடிப்படையில்தான் காவல் துறை அதிகாரி என்னுடைய வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார். அதற்கு பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. பாலாவும் பலமுறை ஆஜராகவில்லை. பாலா 250 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர். ஆனால் பணமே இல்லை என்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. பாலா என்னை ஏமாற்றிவிட்டார். உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











