சினிமாவின் பொல்லாதவன் தனுஷுக்கு இன்று 35வது பிறந்தநாள்…!
நடிகர் தனுஷ் இன்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் தனுஷ் இன்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஒரு நடிகன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கான அத்தனை லட்சணங்களையும் பெற்றிருக்கும் ஒருவர் என ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்டார் தனுஷ்.
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மெலிந்த தேகம், சோடா புட்டிக் கண்ணாடி என பெண்கள் ரசிக்க தயங்கும் கதாப்பாத்திரத்திற்கேற்ற உடல்மொழியில் ஒரு நடிகன். தமிழ்த் திரையுலகம் நகைத்தது.
அப்பா அறிமுகத்தில் திரைக்கு வந்த தனுஷ், அண்ணன் செல்வராகவனின் வழிகாட்டுதலோடு பயணிக்க ஆரம்பித்தார். செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இன்றளவும் தனுஷ் குரலை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் அப்படத்தில் வரும் திவ்யா... வா .. திவ்யா என்ற வசனத்தைப் பேசி மேடையில் பிழைப்பது அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

ஆரம்பம்
ஏறிய வேகத்தில் தனுஷ் மார்க்கெட் சறுக்கும் நிலைமை ஏற்பட்டது. அடுத்து வந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கஸ்தூரிராஜா இயக்கிய ட்ரீம்ஸ் திரைப்படமும் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக ரிலீஸ் ஆனது.

விமர்சனம்
பாலுமகேந்திராவின் அது ஒரு கனா காலம், நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பூபதி பாண்டியனின் தேவதையைக் கண்டேன் திரைப்பம் எல்லா இடங்களிலும் கமர்ஷியலாக வெற்றிபெற்றது. காதலியை சேர்த்து வையுங்கள் என்று சட்ட ரீதியான காதல் போராட்டத்தை தனுஷ் கையில் எடுத்திருந்தார்.
அது அஜித்-விஜய் போன்று, சிம்பு தனுஷ் மோதல்கள் உச்சத்தில் இருந்த காலகட்டம். தேவதையைக் கண்டேன் திரைப்படம் சிம்புவின் அடுத்த படத்தில் விமர்சிக்கப்பட்டது.

செல்வாவும் வெற்றிமாறனும்
தனுஷின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய படங்கள் புதுப்பேட்டை மற்றும் பொல்லாதவன்.
நடிகர் தனுஷ் ஒல்லியான தேகத்துடன் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளவும், நடிப்புத் திறனை வெளிப்படுத்தவும் பல தளங்களை அமைத்துக் கொடுத்த படம் எனச் சொல்லலாம். எங்க ஏரியா என வட சென்னையை சொந்தம் கொண்டாடும் பாடல், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை கல்யாணம் செய்வது என பல விஷயங்களில் புதுப்பேட்டை கொண்டாடப்பட்டது.
அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன பொல்லாதவன் ஒரு இளைஞனுக்கு பைக் மீது இருக்கும் தீராக்காதல். அந்த பைக்கினால் ஏற்படும் நன்மை தீமைகள் என விரிந்தது. இப்படத்தில் தனுஷுக்கு சமமான இடம் கிஷோருக்கும் வழங்கப்பட்டிருந்தது. தனுஷின் திரை வாழ்க்கையை அடுத்த இடத்திற்கு நகர்த்தியதில் புதுப்பேட்டையும், பொல்லாதவனும் முக்கியமானவை.

இமேஜ் மாற்றம்
வடசென்னைப் பையனாகவே அறியப்பட்ட பின்னர் அந்த இமேஜை மாற்றி ஜனரஞ்சக நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் தனுஷ். அவற்றுள் படிக்காதவன், யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களைச் சொல்லலாம்.

பாராட்டு
ஊர் ஓரத்தில் நடக்கும் கோழிச்சண்டையில் இவ்வளவு விஷயங்கள் அரசியல் இருக்கிறதென்பதையும், வாழ்வில் வெற்றியை ருசித்த ஒரு மனிதன் அதை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்வதையும் அம்பலப்படுத்தும் விதமாக வந்த படம் ஆடுகளம். பேட்டைக்காரன் கதாபாத்திரத்திற்கு தனுஷ் காட்டும் விஸ்வாசம், மாற்றாக பேட்டைக்காரன் செய்யும் துரோகம் கொண்டாடப்பட்டது. ஒரு நடிகன் இதை விட கீழே இறங்கி நடிக்கவே முடியாது என பாராட்டுகளைப் பெற்றார் தனுஷ்.

இந்தி என்ட்ரி
தனுஷின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியவர்கள் இயக்குனர் வெற்றிமாறனும், செல்வராகவனும் தான். மயக்கமென்ன திரைப்படம் பல விதங்களில் விமர்சிக்கப்பட்டது. நண்பனின் காதலியை கரெட் செய்து திருமணம் செய்வது, சைக்கோத்தனமாக சிலகாலம் வாழ்ந்து லட்சியத்தை அடைவது எல்லாம் வேற லெவல்.
தென் இந்திய நடிகராக புகழ்பெற்ற தனுஷ் ராஞ்சனா இந்தி திரைப்படத்தின் மூலம் தேசிய நடிகராக அறியப்பட்டார். அமிதாப்பச்சனுடன் அடுத்து ஷமிதாப் என களத்தில் இறங்கினார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது.

வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி அனேகன், தங்கமகன் போன்ற ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு என்னை நோக்கி பாயும் தோட்டா வட சென்னை என நடிப்பில் புதுப்புது அத்தியாயங்களை தொட்டுக்கொண்டே இருக்கிறார்.
இயக்குனர் அவதாரம் எடுத்த பவர்பாண்டியும் புதிய முயற்சி புதிய கதைக்களம் என கொண்டாடப்பட்டது.

பிரெஞ்ச் படம்
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முத்திரைகளை பதித்துவிட்டார் தனுஷ், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த ஃபக்கிர் என்ற பிரெஞ்ச் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார்.
இவெரெல்லாம் இரு நடிகரா என விமர்சிக்கப்பட்ட ஒருவர், இன்று உலக் அளவில் ஒரு நடிகனாக வளர்ந்திருப்பது அவர் எடுத்த புதிய முயற்சிகளுக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.


Click it and Unblock the Notifications