Dhanush: ரத்தான படப்பிடிப்பு..ஏழுமலையானை நாடி வந்த தனுஷ்!
சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51வது படம் உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்ற நிலையில், போக்குவரத்து பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது, தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திருப்பதியில் படப்பிடிப்பு: இந்தப்படத்தின் படப்படிப்பை திருப்பதியில் நேற்று காலை 6 முதல் மதியம் 1 மணி வரை நடத்திக்கொள்ள திருப்பதி போலீஸார் அனுமதித்திருந்தனர். இந்த படப்பிடிப்புக்காக பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து திருப்பதி மலையடிவாரத்தில், படக்குழு இரண்டு நாட்கள் அனுமதி பெற்றிருந்தனர். இதையடுத்து, திருமலைக்குச் செல்லும் அலிபிரி நுழைவு வாயில் அருகே, கருடன் சிலை இருக்கும் இடத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. இதற்காக போக்குவரத்தை மாற்றுப் பாதையில் போலீஸார் திருப்பி விட்டனர்.
போக்குவரத்து மாற்றம்: இதனால் திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பல வேன்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கூட அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல முடியாமல் நின்றதால், அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குத் தரிசனத்துக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், பக்தர்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
விரட்டி அடித்த பவுன்சர்கள்: அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முயன்றனர். இதனால் அங்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் வெளியேற்றினர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி, போக்குவரத்து மாற்றம் குறித்தும், படப்பிடிப்பு குறித்தும் போலீசில் புகார் கொடுத்தனர்.
கோவில் சாமி தரிசனம்: இதையடுத்து, பக்தர்கள் அவதி, போக்குவரத்துத் இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்துத் செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்தானதால், நடிகர் தனுஷ், திருப்பதி ஏழுமலையால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வழக்கம் போல கொள்ளை வேட்டி சட்டையில் கருங்காலி மாலை அணிந்து கொண்டு தனுஷ், கோவில் வளாகத்தில் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











