Jayam Ravi: சினிமாவில் 20 ஆண்டுகள்.. ஜெயம் ரவி வெளியிட்ட நீண்ட பதிவு!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.
சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த ஜெயம் ரவிக்கு ஒருகட்டத்தில் சிறப்பான படங்கள் அமைய, தன்னை ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொண்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக இவரது நடிப்பில் இறைவன் படம் வெளியாகவுள்ளது.

சினிமாவில் ஜெயம் ரவியின் 20 ஆண்டுகள்: நடிகர் ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கியவர். ஆனாலும் தன்னுடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் என்ற படம் மூலம் ஹீரோவாக நடித்து, முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தப் படம் கடந்த 2003ம் ஆண்டில் ஜூன் 21ம் தேதி ரிலீசான நிலையில், முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் சதா ஜோடியாக நடித்திருந்தார்.
ஜெயம் ரவி -சதா காம்பினேஷன் மிகவும் ப்ரெஷ்ஷாக அமைந்தது. ரசிகர்களை கட்டிப் போட்டது. இந்தப் படத்தின்மூலம் தன்னுடைய கேரியருக்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொண்ட ஜெயம் ரவி, தொடர்ந்து நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் அவருக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது- இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ஜெயம் ரவியின் அம்மாவாக நதியா நடித்திருந்தது இந்தப் படத்தின் ப்ளசுக்கு காரணமாக அமைந்தது.
தொடர்ந்து மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, ரோமியோ ஜூலியட், மிருதன், போகன், கோமாளி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள ஜெயம் ரவி, மினிமம் கேரண்டி ஹீரோவாக இயக்குநர்களின் சாய்சாக உள்ளார். இவர் நடித்தால் அந்தப் படம் கண்டிப்பாக ஹிட் தான் என்ற பெயரை இவர் கோலிவுட்டில் பெற்றுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் அகிலன் என படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் அடுத்தடுத்து இவரது இறைவன், சைரன், எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், JR32 ஆகிய படங்களில் இவர் கமிட்டாகியுள்ளார். இதில் இறைவன் படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி சினிமாவில் நடிக்க வந்து தற்போது 20 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி அவர் ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்லை எட்டியதற்கு தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் ஜெயம் முதல் பொன்னியின் செல்வன் 2 வரை தன்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த 20 ஆண்டுகால பயணத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றும் தன்னுடைய பதிவில் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











