நெற்றியில் விபூதி.. மடாதிபதியுடன் சந்திப்பு.. நாத்திகத்தை மறந்தாரா ‘நம்மவர்’ கமல்?
சென்னை: நெற்றியில் விபூதி சகிதம் நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஜீயரை நடிகர் கமல் சந்தித்துப் பேசுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆன்மீகம் தொடர்பான விசயங்களில் கமல் எப்போது பூடகமாகவே பேசுபவர் என பெயரெடுத்தவர். கடவுள் இல்லைனு நான் சொன்னேனா, இருந்திருந்தா நன்றாக இருந்திருக்கும் என்பது போன்ற வசனங்கள் மூலம் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் தான் சர்ச்சையை உண்டாக்கும்.
இந்நிலையில், தற்போது நெற்றியில் விபூதி சகிதம் கமல் தோன்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

த்ரிஷ்யம்...
மோகன்லால்,மீனா நடிப்பில், ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியாகி, கேரளாவில் வசூலை வாரிக் குவித்த மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்' தற்போது தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

படப்பிடிப்பு...
தமிழ் ரீமேக்கையும் ஜீது ஜோசப்பே இயக்க, மோகன்லால் கதாபாத்திரத்தில் கமலும், மீனா கதாபாத்திரத்தில் கௌதமியும் நடிக்கிறார்கள். கடந்த வாரம் தொடங்கி தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாபநாசம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஜீயரைச் சந்தித்த கமல்...
இந்நிலையில், நாங்குநேரியில் ‘பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஜீயர் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை அவரது மடத்துக்கே சென்று கமல் சந்தித்ததுதான் இப்போது இணையதளங்களில் ஹாட் டாபிக்.

விமர்சனம்...
பகுத்தறிவு கருத்துக்களையும், நாத்திக சிந்தனைகளையும் பேசி வரும் கமல் நாங்குநேரி ஜீயரை சந்தித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதிலும் குறிப்பாக நெற்றியில் விபூதியுடன் கமல் இருக்கும் புகைப்படம் பலத்த விமர்சனங்களுக்கு ஆளானது.

படப்பிடிப்பு தொடர்பாக...
இது தொடர்பாக நாங்குநேரியில் உள்ள வானமாமலை மடத்தின் 31வது ஜீயரான ஸ்ரீ மதுரகவி வான மாமலை ராமானுஜ ஜீயர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில், "அவர் நடித்து வரும் படத்தின் ஆன்மீக காட்சி ஒன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுத்தார்கள்.

மரியாதை நிமித்தம்...
இந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆன்மிகம் குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

புகைப்படம்...
தொடர்ந்து மடத்தில் உள்ள பழங்கால பல்லக்குகள் போன்றவற்றையும் புகைப் படம் எடுத்து சென்றதாக மடத்தின் சிப்பந்திகள் தெரிவித்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

அமைதி பதில் சொல்லும்...
இந்தச் சந்திப்புக்கு பின்னர் கமல் ஆன்மிகப் பாதையில் திரும்ப வாய்ப்பு உள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவர் முகத்தோற்றமும், அதில் குடி கொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும்" என புதிருடன் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











