2வது திருமணம் முடிந்து 2 வாரம் கூட ஆகல.. வசமாக சிக்கிய கிருஷ்ணா.. ஸ்ரீகாந்த் கதிதான் இவருக்கும்?
சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகருமான கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட்டில் மேலும், பரபரப்பை கூட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து பெற்றவர் தான் நடிகர் கிருஷ்ணா.
இந்த மாதம் ஜூன் 6ம் தேதி புதிதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையின் புதிய தொடக்கம் தொடங்கியிருப்பதாக போஸ்ட் ஒன்றை வெளியிட்டு ஏகப்பட்ட பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்ற நடிகர் கிருஷ்ணா, 2 வாரங்களில் அதிரடியாக கைதாகி இருப்பது திரைத்துறையை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் புது மனைவியையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், தான் தவறு செய்து விட்டதை நடிகர் ஸ்ரீகாந்தும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோலிவுட்டையும் விடாத டிரக்ஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ என எல்சியூ படங்களின் மையக் கருவே போதைப் பொருள் தான். விஜய் சேதுபதி தனது வீட்டிலேயே போதைப் பொருள் செய்யும் காட்சிகளை விக்ரம் படத்தில் வைத்திருப்பார்கள். டத்தூரா என்கிற செடியை பயிரிட்டு லியோ படத்தில் போதைப் பொருளுக்கான மூலப் பொருளையே தயாரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மும்பையில் ஏகப்பட்ட பிரபலங்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் எல்லாம் கைது செய்யப்பட்டு, பின்னர் அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டார். கன்னட சினிமாவிலும் நடிகை ராகினி திவேதி உள்ளிட்ட பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கினர். இந்நிலையில், கோலிவுட்டில் படங்களில் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரொம்ப காலமா இருக்கு: போதைப் பொருள் பழக்கம் சினிமாவில் ரொம்ப காலமாகவே இருக்கிறது என்று நடிகர் விஜய் ஆண்டனி மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறார். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சினிமா நடிகர்கள், நடிகைகள் என பலரும் பார்ட்டிகளில் பயன்படுத்தி வருகின்றனர் என பாடகி சுசித்ராவும் தனது வாய் வரைக்கும் வந்த போதைப் பொருளை தொடவே இல்லை என பேட்டியளித்துள்ளார்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது: போதைப் பொருள் பயன்படுத்தியதை ஸ்ரீகாந்த் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், தனது உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன என்றும் தான் அதை பயன்படுத்தியதே கிடையாது என்று விசாரணையில் கூறிய கிருஷ்ணாவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் கடைசியாக அவரையும் கைது செய்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கழுகு பட ஹீரோ போலீசாரிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்தாரா என்கிற கேள்விகளும் எதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர் என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன. கூடிய விரைவில் அதற்கான விளக்கம் வெளியாகும் என தெரிகிறது.
2வது திருமணமாகி 2 வாரம் கூட ஆகல: கடந்த 2015ம் ஆண்டு கைவல்யா என்று அழைக்கப்படுகிற ஹேமலதா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட கிருஷ்ணா, தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார் என ஜேக்ஸ் பேரோ நடிகர் ஜானி டெப் ரேஞ்சுக்கு அப்போதே புகார் கொடுத்து விவாகரத்து பெற்றது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. ஹேமலதா அப்படிப்பட்ட பெண் இல்லை என அவரது கல்லூரி ஆசிரியர் எல்லாம் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் செய்திருந்தார். அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து இந்த மாதம் ஜூன் 6ம் தேதி நடிகர் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் முகத்தை கூட காட்டாமல், ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு புதிய தொடக்கம் என பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், திருமணமாகி 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், இப்படி போதைப் பொருள் வழக்கில் கைதாகி விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











