என்னது விஜய் என் நண்பரா?.. ஹலோ அப்படி சொல்றதுலாம் கஷ்டம்.. பிரசாந்த் அதிரடி பேச்சு
சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் இப்போது விஜய் நடிக்கும் GOAT படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

பாலுமகேந்திராவுடன்: குறிப்பாக பிரசாந்த்துக்கு இரண்டாவது படத்திலேயே பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. வண்ண வண்ண பூக்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பிரசாந்த்துக்கு மேற்கொண்டு சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து நடித்த செம்பருத்தி, எங்க தம்பி படங்களும் ஹிட்டானது. சூழல் இப்படி இருக்க மணிரத்னத்தின் பார்வை பிரசாந்த்தின் பக்கம் திரும்பியது.
திருடா திருடா: தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.
சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.
ரீ எண்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் பிரசாந்த்துக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் GOAT படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் அவர். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் படத்தில் நடிக்கவில்லை. விஜய்யுடன் நடிக்கிறேன் என்று அட்டகாசமாக தன்னுடைய கெத்தை விடாமல் பதிலை கொடுத்துவிட்டு சென்றார்.
விஜய் நண்பர் இல்லை: இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர் ஒருவர் நண்பர் விஜய் என்று குறிப்பிட்டார். உடனடியாக பிரசாந்த், விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை. சகோதரன் என்று சொல்லுங்கள் என கூறினார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து உங்களிடம் விஜய் என்ன பேசினார் என்று கேட்கப்பட்டபோது, இரண்டு பேர் தனியாக பேசிக்கொண்டதை எப்படி பொதுவெளியில் சொல்ல முடியும். அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று சாதுரியமாக பதிலை சொல்லிவிட்டு கிளம்பினார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











