Actor Rajinikanth: ராமர் கோயில் திறப்பில் அரசியல் இல்லை.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் பேட்டி!
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்றைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்திய அளவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், சச்சின் டெண்டுல்கர், விராத் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். நேற்றைய தினம் கருவறையில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்பு பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அயோத்தி மட்டுமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் முழுமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் நேற்று முன்தினம் விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார். இதேபோல தென்னிந்திய அளவில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், யாஷ் உள்ளிட்டவர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தனர். நடிகர் தனுஷும் தன்னுடைய மகன்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தென்னிந்திய அளவில் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துக் கொண்ட இந்த நடிகர்கள், எந்தவிதமான கௌரவமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் சிரித்து பேசி மகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.

அயோத்தி ராமர் கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்றைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவிஐபிக்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். இந்திய அளவிலும் முன்னணி நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்று கோயில் கருவரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமரை வழிப்பட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த்: தென்னிந்திய அளவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண், தனுஷ், யாஷ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி லதா ரஜினியுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவருக்கு சில தினங்கள் முன்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் குடும்பத்தினருடன் விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிகழ்வு வரலாற்றில் முக்கியமான ஒன்று என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி வரவேற்பு: இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்ட ரஜினிக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியும் ரஜினி உள்ளிட்ட முன் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களிடம் வணக்கம் தெரிவித்து வரவேற்றதை பார்க்க முடிந்தது. இதையடுத்து இன்றைய தினம் ரஜினிகாந்த் அயோத்தியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150 பேர்களில் தானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சிறப்பான முறையில் தரிசனம் கிடைத்ததாகவும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
ராமர் கோயில் திறப்பில் அரசியல் இல்லை: ராமர் கோயில் திறப்பை ஆன்மீகம் சார்ந்ததாகவே தான் பார்ப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். இதில் அரசியல் இல்லை என்றும் கூறியுள்ளார். ராமர் கோயில் திறப்பு மத அரசியலை முன்னிறுத்தும் நிகழ்வு என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு மாதிரி இருக்கும். அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக அயோத்தியில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அயோத்திக்கு வருவேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











