வீடு திரும்பியதில் மகிழ்ச்சி, நல்ல நேரத்துக்காக பிரார்த்திக்கிறேன்: ஜெ.க்கு ரஜினி கடிதம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில், தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள ஜெயலலிதாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகிழ்ச்சி...
"நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்...
உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முயற்சி...
ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சுழலை தங்களுக்கு சாதகமாக்கி, ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதை சமீபத்திய சந்திப்புகள் உறுதி செய்து வருகின்றன.

ரஜினியின் கடிதம்...
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதம்...
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ரஜினி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

மேனகா காந்தி...
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது என்றும், ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகள் முடியும்...
மேலும், எல்லா பிரச்சினைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள் என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











