கராத்தே பாபு டீசர் ரியாக்ஷன்.. ரவி மோகனை கூப்பிட்டு விசாரித்த அமைச்சர் சேகர்பாபு.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் ரவி மோகனின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கராத்தே பாபு. இந்த படத்தை டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார். படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த டீசர் முழுக்க முழுக்க தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நடக்கும் காட்சிகளை மையப்படுத்தியதாக இருந்ததால், டீசர் பரவலாக கவனம் பெற்றது. இந்நிலையில், மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன், சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இதனால் இவரை ரசிகர்கள் தொடங்கி, திரையுலகில் அனைவரும் ஜெயம் ரவி என அழைத்து வந்தார்கள். அவரை தன்னை ஜெயம் ரவி என்றே அடையாளப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர், தனது மனைவியைப் பிரிந்த பின்னர், தனது பெயரை ரவி மோகன் என மாற்றி வைத்தது பலரது கவனத்தை பெற்றது.

ரவி மோகன்: இப்படியான நிலையில் தான் இவரது கராத்தே பாபு படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் ஷண்முக பாபு என இருந்த பெயர் கராத்தே பாபு என மாறுவது போல காட்சி இடம்பெற்றது. அதேபோல், ஜெயம் ரவி என்ற பெயர் ரவி மோகன் என மாறுவது போலவும் காட்சி அமைந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.
சேகர் பாபு: அதாவது, " உங்கள் அனைவருக்கும் என்னை ஜெயம் ரவியாகத்தான் தெரியும். ஆனால், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ரவி மோகன் என்பதுதான் அது. ஜெயம் ரவி எனும் பெயர் அன்பு நண்பர்களாலும் ரசிகர்களாலும் எனக்கு கிடைத்த பெயர். இன்றைக்கு ரவி மோகனாக நான் உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன் என, கராத்தே பாபு எனும் படத்தில் நான் டீசர் போட்டிருந்தேன். அந்த டீசரை பார்த்த பின்னர் அமைச்சர் சேகர் பாபுவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அதேபோல் இயக்குநருக்கும் போன் வந்தது. இயக்குநர் கொஞ்சம் பயந்து கொண்டே போனார். டீசர் பார்த்துவிட்டு ஏதாவது சொல்வார் என நினைத்துக் கொண்டு போனார்.
கரேத்தே பாபு: இயக்குநரிடம், என்னப்பா கராத்தே பாபு-னு படம் எடுக்கறீங்களாமே? கதை நம்ம கதை மாதிரி இருக்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர், இல்லை எனவும் அந்த படத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மழுப்பலாக பதில் அளித்தார். உடனே, அமைச்சர் சேகர் பாபு, 'தம்பி நான் தான் கராத்தே பாபு' என பதில் அளித்தார். இப்படி நகைச்சுவையாகவும் அன்பாகவும் அந்த படத்திற்கு வாழ்த்து சொன்ன சேகர் பாபு ஐயாவுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்" என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











