கடைசி விவசாயி படத்தை ஏன் பாராட்டவில்லை.. ரஜினியை கடுமையாக விமர்சித்த இளம் நடிகர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.
ரஜினிகாந்த் என்ற பெயர் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் பெரும்பாலும் ஹிட் படங்களையே கொடுத்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனைக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக சாமானியர்கள் முதல் ஸ்டார்கள் வரை ரஜினிகாந்த்தை தான் தங்களது முதல் ஸ்டாராக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் விலக்க முடியாதது.

சின்ன சறுக்கல்: ரஜினிகாந்த் இடையில் சின்னதாக சறுக்கினார். அவர் நடித்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி தடுமாறிவிட்டதாக கூறினர். ஆனால் அதெல்லாம் தடுமாறவில்லை என்பதை ஜெயிலர் படத்தில் நிரூபித்தார் ரஜினி. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் பயங்கரமாக வாரிவிட்டது.
வேட்டையன், கூலி: இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் கண்டிப்பாக பெரிய சம்பவமாக செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அந்தப் படத்துக்கு போட்டியாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் அன்றைய தினம் வெளியாகிறது. வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார்.
பாராட்டும் குணம்: ரஜினிகாந்த் உச்சபட்ச இடத்தில் இருந்தாலும் தமிழில் நல்ல படங்கள் எதுவும் வெளியானால் மனதார பாராட்டுவார் அவர். அந்தவகையில்தான் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த வாழை படத்தை பாராட்டியிருந்தார். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வளர்ந்துவரும் நடிகரான ஆர்.எஸ்.கார்த்திக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: ஃபில்மிபீட் தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், "சந்திரமுகி 2 படம் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டிய ரஜினியால் ஏன் கடைசி விவசாயி படத்தை பாராட்ட முடியவில்லை. அதேபோல் மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டிய கமலும் ஏன் கடைசி விவசாயி படத்தை பாராட்டவில்லை. நானெழுதி தருகிறேன். கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கப்படும் படங்களைவிடவும் சின்ன படங்களில் கன்டெண்ட் அருமையாக இருக்கிறது. சினிமாவில் இருக்கும் இவர்களே நல்ல சினிமாவை வளர்க்கவில்லை. மேடையில் மட்டும் வந்து பேசுகிறார்கள்" என்றார். ஆர்.எஸ் கார்த்திக் அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











