கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு.. நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை: விஜய் டிவியின் லொள்ளு சபாவில் கலக்கி வந்த சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.
இனிமேல் இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக அசத்திய சந்தானம் இனிமேல் ஹீரோ தான் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் சந்தானம் நடிப்பில் குலுகுலு திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் கட்டிட காண்ட்ராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானது பரபரப்பை கிளப்பி உள்ளது.

காமெடிக்கு பஞ்சம்
நாகேஷ், கவுண்டமணி - செந்தில், விவேக், வடிவேலு வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக அசத்தியவர் நடிகர் சந்தானம். அவர் ஹீரோவான பிறகு இன்னமும் அந்த இடத்திற்கு இன்னொரு பிரபலமான காமெடி நடிகர் வரவில்லை என்கிற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சூரி, யோகி பாபு உள்ளிட்ட காமெடி நடிகர்களும் ஹீரோவாகி விட்ட நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நடிகருக்கான பெரும் பஞ்சம் நிலவி வருகிறது.

குலுகுலு
லெஜண்ட் சரவணாவின் தி லெஜண்ட் படம் இந்த மாதம் ஜூலை 28 ரிலீசாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வரும் ஜூலை 29ம் தேதி சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் வெளியாகிறது. மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வித்தியாசமான காமெடி படமாக உருவாகி உள்ள குலுகுலு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

என்ன பிரச்சனை
சந்தானம் அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம், நடிகர் சந்தானம் கொடுத்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த பணி நின்று போனது இதையடுத்து தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

அடிதடி
கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிட காண்ட்ராக்டரின் அலுவலகத்தில் தனது மானேஜருடன் சென்று பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது இதில் மாறி, மாறி தாக்கி கொண்டதில் கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் நடிகர் சந்தானம் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சந்தானம் ஆஜர்
இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் சந்தானம் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications











