நீங்க சங்கியா? செய்தியாளரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த சந்தானம்!
சென்னை: இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இப்படத்தின் சச்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தை கொண்டாடுகிறார்கள்: அப்போது பேசிய நடிகர் சந்தானம், வடக்கு பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்காக அனைவரும் அவர்களின் வேலையை சரியாக செய்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படத்திற்கு நல்ல பாசிட்டிவாக ரிவ்யூ வந்தது. எல்லாரும் படத்தை கொண்டாடுகிறார்கள்.
காமெடி படம் எடுப்பது கஷ்டம்: இந்த படத்தில் என்னுடன் நடித்தவர்கள் அனைவரும்,என் அனைத்து படத்திலும் வருவார்கள். ஆனால் ஹீரோயின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா என்று இயக்குநரை தான் கேட்க வேண்டும். மேலும் தெற்குப்பட்டி தென்ராசு என்று இன்னொரு படம் யோசித்து வைத்திருந்தோம். மக்கள் சினிமாவை ரசிக்க வேண்டும். ஹாரர் காமெடி என்பதை விட சோசியல் காமெடி பண்ணுவது மற்றும் அதை கையாள்வது என்பது மிகவும் கடினம் என்றார்.

நீங்க சங்கியா?: இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சமூக வலைத்தளங்களில் என்னை சங்கி என்று பேசி வருகிறார்கள். நான் பள்ளியில் படிக்கும் போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணினேன். அவரைக்கூட சங்கி சங்கின்னு தான் கூப்பிடுவேன். அதுக்காக அவர் சங்கி ஆகிவிடுவாரா? இந்த படம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு தரப்பினரும் பார்க்கும் படமாக உள்ளது. படத்தின் கருத்து மத நம்பிக்கையை வைத்து பணத்தை சம்பாதிக்க கூடாது என்பதுதான். பின்னர் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதற்கு, எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது எனவே எனக்கு கடவுள் இருக்கிறார் என்றார்.
அனைவரையும் சிரிக்க வைக்கணும்: மேலும், என்னுடைய இயல்பே என்னை சுற்றி உள்ளவர்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன். அந்த ஒரு பண்புதான் எனக்கு விஜய் டிவியில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அதை பார்த்து தான் சிம்பு எனக்கு மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் சினிமா என்பது என் கையில் வந்தது. நான் உங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











