மீடூ: எப்போது நடந்தது என்பது முக்கியமில்லை, என்ன நடந்தது என்பது தான் முக்கியம்- சரத்குமார்
சென்னை: எப்போது நடந்தது என்பது முக்கியமில்லை, என்ன நடந்தது என்பதே முக்கியம் என மீடூ பற்றி கருத்து தெரிவித்துள்ளார் சரத்குமார்.
நடிகர், அரசியல்வாதி என பிஸியாக இருக்கும் சரத்குமார் தற்போது முதல்முறையாக தியேட்டர் பிளே ஒன்றில் நடிக்கிறார். வைல்டு டேல்ஸ் குழுவினருடன் ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

தங்க்லிஷ் காமடி டிராமாவாக தயாராகிவரும் இந்த நாடகத்தை ஸ்ரீராம் ஜீவன் இயக்குகிறார். ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும், அதனால் இந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். பணத்திற்காக நாடகத்தில் நடிக்கவில்லை எனக் கூறும் சரத், இப்போது மேடை நாடகம் மற்றும் ஸ்டேண்டப் காமெடிகளில் நிறைய திறமையானவர்களை பார்க்க முடிகிறது என்றும், சொல்ல நினைக்கும் விஷயத்தை அசாத்தியமாக மேடையில் வெளிப்படுத்துகின்றனர் எனவும் கூறினார்.
ஒரு அரசியல்வாதியாக இந்த மேடை அனுபவம் உதவியாக இருக்கும் எனவும், தேர்தல் நேரத்தில் கட்சியின் கொள்கைகளை விளக்க மேடை நாடகத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக இருக்கும் மீடூ விவகாரம் பற்றி பேசிய சரத்குமார், எப்போது நடந்தது என்பது முக்கியமில்லை, தவறு நடந்திருந்தால் அதை செய்தவர்களுக்கு எதிராக நிற்க வேண்டும். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு இது பயத்தை உண்டுபண்ணியிருக்கிறது. அதே நேரத்தில் சொல்லக்கூடிய புகார்களில் உண்மை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் யார் வேண்டுமானலும், யாரையும் தவறாக சொல்லி இழிவுபடுத்திவிட முடியும் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











