நான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன்.. அதிரடியாக கூறிய சித்தார்த்
சென்னை: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் சித்தார்த். தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் கடைசியாக இந்தியன் 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் நடிகை அதிதியை திருமணம் செய்துகொண்டார்.இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குநராக இருந்த சித்தார்த்தை இயக்குநர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வெளியானபோது மோசமான விமர்சனங்களை பெற்றாலும் இன்றளவும் பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது அந்தப் படம். பாய்ஸ் படம் சித்தார்த்துக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததை அடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்தவகையில் அவர் ஆய்த எழுத்து படத்தில் நடித்தார். பிறகு தமிழில் அவருக்கு மார்க்கெட் ஒழுங்காக இல்லாததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய அவர் தொடர்ந்து அங்கு நடித்துக்கொண்டிருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்த அவர்; நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் 180 படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் பிஸி: அதனையடுத்து தீயாய் வேலை செய்யணும் குமாரு, உதயம் NH4, காவியத் தலைவன், காதலில் சொதப்புவது எப்படி என்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பிஸியாக நடித்தாலும் அவர் எதிர்பார்த்த திருப்புமுனை எதிலுமே கிடைக்கவில்லை. அதேசமயம் தெலுங்கு, ஹிந்தியில் அவருக்கென்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் சில பாடல்களை பாடியிருக்கிறார் அவர்.
மிஸ் யூ சித்தார்த்: தமிழில் தனக்கு எப்போது பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு சித்தா படம் அதனை கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூழலில் அடுத்ததாக கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி சித்தார்த் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பெரும் கிண்டலுக்கு உள்ளானது. இதனையடுத்து மிஸ் யூ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இரண்டாவது திருமணம்: இதற்கிடையே சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது. மேலும் சமந்தாவை சில காலம் காதலித்து பிரிந்தார். சூழல் இப்படி இருக்க மகா சமுத்திரம் படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவை காதலித்தார். அவர்களது திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் நடைபெற்றது. அதிதிக்கும் இந்தத் திருமணம் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சித்தார்த் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அப்படி நடிக்கமாட்டேன்: அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "பெண்களை அடிப்பது, ஒரு பெண்ணின் இடையை கிள்ளுவது, ஒரு பெண்ணை கட்டுப்படுத்துவது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் என்னை தேடி வந்தன. ஆனால் அதையெல்லாம் ஏற்று நடிக்க மறுத்துவிட்டேன். அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்றிருந்தால் நானும் எப்போதோ பெரிய ஸ்டாராகி இருப்பேன். ஆனால் நான் எனது மனதுக்கு பிடித்ததை மட்டுமே செய்பவன்.பெண்களுக்கு நான் மரியாதை கொடுப்பவன்" என்றார்.


Click it and Unblock the Notifications











