Sivakarthikeyan Fans Meet -ஆட்டத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன்..குட்டி தளபதி எஸ்கேதானா?..ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக கருதப்பட்ட விஜய் சேதுபதியும் தற்போது ஹிந்திவரை சென்றுவிட்டதாலும்; விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாலும் அடுத்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனே என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு தொகுப்பாளராக வளர்ந்து அதன் பின்னர் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அவர் அடித்த லூட்டிகளும், டைமிங் காமெடிகளும் மக்கள் மத்தியில் அப்போதே சென்று சேர்ந்துவிட்டன. இதன் காரணமாக சினிமாவில் அறிமுகமாகும்போது ரசிகர்களிடம் எளிதாகவே கனெக்ட் ஆகிவிட்டார் சிவா. இருந்தாலும் பத்து படங்களுக்குள்ளாகவே அவரது திரை பயணம் முடிந்துவிடும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த சிவகார்த்திகேயன்: ஆனால் அந்த ஆரூடத்தை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக இருந்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி. நடனம், நடிப்பு என அத்தனையையும் முறையாக கற்றுக்கொண்டு படத்துக்கு படம் உயர்ந்த இடத்துக்கு சென்றார். அதன் காரணமாக விரைவாகவே டாப் 10 நடிகர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். குறிப்பாக டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அதனை பார்த்த பலரும் பலமாகவே ஆச்சரியப்பட்டார்கள்.
அமரன்: வரிசையாக இரண்டு நூறு கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்த சிவாவுக்கு பிரின்ஸ் இடியாக விழுந்தது. அதில் விட்டதை மாவீரன் படத்தில் பிடித்தார். முக்கியமாக மாவீரன் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த அவர், பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிடுவேன் என்று சூளுரைத்தார். சொன்னபடியே ஹிட்டடித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்த விஜய்யா?: அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே நடிகர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். எனவே அடுத்த விஜய் தமிழ் சினிமாவில் யார் என்ற கேள்வியை பலரும் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனின் ரசிகர்களோ, அடுத்த தளபதி எங்கள் எஸ்கே அண்ணாதான். அவர்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்களவரை அனைவரையும் கவர்ந்திருக்கிறார் என்று சொல்லிவருகிறார்கள்.
ஆட்டத்தை ஆரம்பித்த சிவா: அவரது ரசிகர்கள் இப்படி சொல்லிவந்தாலும் சிவகார்த்திகேயனோ அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் அவர் இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். போரூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் சிவா உரையும் ஆற்றினார். இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்று பலரும் கூறிவரும் சூழலில்; திடீரென இப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததன் மூலம் எஸ்கே தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் என்றும்; யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது வளர்ச்சி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி சிவாவின் மேனரிஸத்திலும் விஜய்யின் ஸ்டைல் கொஞ்சம் ஒட்டியதை கவனிக்க முடிவதாகவும்; இனி சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு நகர்வும் விஜய் அமர்ந்திருந்த தளபதி நாற்காலியை நோக்கியதாகவே இருக்கும் என்றும் திரைத்துறையினர் கணித்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











