5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரியாகும் சுரேஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: 80 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சுரேஷ். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு,மோகன் என பல நடிகர்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டு இருந்த நேரத்தில், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுரேஷ், நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். தற்போது இவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ். பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கங்கை அமரன் இயக்கிய கோழி கூவுது திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சுரேஷுக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. துணை, பூக்களை பறிக்காதீர்கள், மருமகள், செல்வி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகை நதியாவுடன் அதிக படங்களில் நடித்தால், இருவரும் காதலிப்பதாக கூட அப்போது கிசுகிசுக்கள் வெளிவந்தன.

நடிகர் சுரேஷ்: திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போன சுரேஷ், கிழக்கு கடல்கரை சாலை மூலம் தமிழுக்குத் திரும்பினார். பின், ஆசல், பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்தார். இதுமட்டுமில்லாமல், விஜய் தொலைக்காட்சியில், கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சுரேஷ் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: ஹரா படத்தின் மூலம் மோகனை மீண்டும் நடிக்க வைத்த இயக்குநர் விஜய்ஸ்ரீ சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மலேசியாவைச் சேர்ந்த ஜி.வி இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் 19ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











