கனவு.. நம்பிக்கை வழிநடத்திய 25 ஆண்டுகால பயணம்.. சூர்யா சூப்பர் ட்வீட்!
சென்னை : நடிகர் சூர்யா இன்றைய தினம் திரையுலகில் தன்னுடைய 25வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரையில் தன்னுடைய 25 ஆண்டுகாலங்கள் குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா கடந்த 1997ல் நேருக்கு நேர் படத்தின்மூலம்தான் சினிமாவில் என்ட்ரியானார். தன்னுடைய கடனுக்காகத்தான் தான் சினிமாவில் நடிக்கத் துவங்கியதாக சமீபத்தில் சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். கடனுக்காக நடிக்க வந்து தற்போது தன்னுடைய 25 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் சூர்யா.

சாதனை படிக்கட்டுகள்
துவக்கத்தில் சூர்யாவை பார்த்த யாருமே அவரது குழந்தைத்தனமான முகத்தை கேலி செய்யவே துவங்கினர். இந்த கேலி, கிண்டல்களை வேதனைகளாக எடுத்துக் கொள்ளாமல் சாதனைக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ளும் வித்தை ஒரு சிலருக்கே வாய்க்கும். அதை சாத்தியமாக்கியுள்ளார் சூர்யா.

சிறப்பான கேரக்டர்கள்
சாக்லேட் பாய் கேரக்டர்கள் தனக்கு போதாது என்பதை உணர்ந்த சூர்யா, நந்தா, பிதாமகன் போன்ற கதைக்களங்களில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டார். இந்தப் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. அதை பற்றிக் கொண்டு காக்க காக்க போன்ற படங்களின்மூலம் தன்னை நல்ல நடிகராக வெளிப்படுத்தினார்.

வெற்றிமுகம் காட்டிய படங்கள்
தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்தப் படங்கள் வெற்றி முகங்களையே காட்டின. சினிமாவில் தான் காதலித்த ஜோதிகாவையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக சொந்த வாழ்க்கையிலும் தன்னை சிறப்பாக்கிக் கொண்டுள்ளார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார்.

சூர்யாவின் சமூக அக்கறை
நடிகராக மட்டுமில்லாமல் சமூகத்தில் தனக்கான கடமைகளும் உள்ளன என்பதை இவரது அகரம் பவுண்டேஷன் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த சமூக அக்கறை தற்போது இவரது படங்களிலும் வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரையில் இவரது 25 ஆண்டுகால பயணத்திற்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வழிநடத்திய கனவு.. நம்பிக்கை
இதனிடையே இந்த திரைப்பயணம் குறித்து சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மையில் அழகான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் என்று கூறியுள்ள சூர்யா, தன்னுடைய கனவு மற்றும் நம்பிக்கையே தன்னை வழிநடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த மிரட்டலான படங்களை கொடுத்துள்ள நிலையில், இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42, வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களும் உருவாகவுள்ளன. தயாரிப்பிலும் அடுத்தடுத்த படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











