ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றி: சூர்யா
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அலங்காநல்லூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.

பீட்டா
தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்
சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் உரிதாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைக்கோர்க்கிறேன்.
போராட்டம்
மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றி பெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக் கூடாது. நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம்.


Click it and Unblock the Notifications











