புதிய உலகத்தை அறிமுகம் செய்தவர்... பாலா குறித்து சூர்யா நெகிழ்ச்சி
சென்னை : நடிகர் சூர்யா -இயக்குநர் பாலா காம்பினேஷனில் வெளியான படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவை.
தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் இந்த புதிய படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சூர்யா, தனக்கு புதிய உலகத்தை அடையாளம் காட்டியவர் பாலா என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா டைரக்ஷனில் தன்னை மெருகேற்றிக் கொண்டவர் நடிகர் சூர்யா. நந்தா, பிதாமகன் படங்களில் சூர்யாவின் நடிப்பு மிளிர்ந்தது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் பாலாதான். இந்தப் படங்களுக்கு பிறகே சூர்யாவின் நடிப்பில் முதிர்ச்சி தென்பட்டது. அதுவரை காதல் நாயகனாக வலம்வந்தார்.

சறுக்கலில் பாலா
பாலா தயாரிப்பில் மாயாவியிலும் நடித்திருந்தார் சூர்யா. கடைசியாக பாலா இயக்கத்தில் நாச்சியார் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பாலாவிற்கு சறுக்கலாக அமைந்தது. படத்தில் பாலாவின் இயக்கத்தை நிராகரித்து வேறு இயக்குநரை வைத்து படம் இயக்கப்பட்டது.

சூர்யாவுடன் அடுத்த படம்
இந்நிலையில் தற்போது பாலா தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதர்வாவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அந்தக் கதையை கேட்ட சூர்யா, தானே நடிக்க ஆர்வம் தெரிவித்து தேதிகள் கொடுத்துள்ளார். மேலும் அவரின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

சூர்யா அறிவிப்பு
தற்போது இந்தப் படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார். பாலா குறித்து அந்த ட்வீட்டில் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னை விட தன்மீது அதிக நம்பிக்கை வைத்தவர் பாலா என்று அவர் கூறியுள்ளார். ஒரு புதிய உலகை தனக்கு அறிமுகம் செய்து தனக்கு அடையாளம் தந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலா குறித்து நெகிழ்ச்சி
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் பாலா முன்பு தான் இருப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார். பாலா அண்ணனுடன் தன்னுடைய தந்தை சிவக்குமார் ஆசிர்வாதத்துடன் மீண்டும் ஒரு அழகிய பயணம் துவங்கவுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிறப்பான கூட்டணி
இந்த பயணத்தில் அனைவரது அன்பும் ஆதரவும் தொடர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாலா மற்றும் சிவக்குமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நந்தா, பிதாமகன் படங்கள் கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படங்கள். இந்நிலையில் மீண்டும் அத்தகையதோர் படத்தை இந்த கூட்டணியில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











