Actor Vijay: புதுச்சேரியில் GOAT படப்பிடிப்பு.. மீண்டும் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்!
சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. விஜய் தற்போது தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில் GOAT படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு நடிப்பை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் என்ட்ரியால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், அவரது நடிப்புக்கு முழுக்கு என்ற அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தற்போது GOAT படத்தின் சூட்டிங் விறுவிறுப்பான நடந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தில் விஜய்யை டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையாக காட்ட படக்குழுவினர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் ஹீரோவாக நிலைத்து உள்ளவர். இளைய தளபதியாக இருந்த அவரை ரசிகர்கள் தளபதியாக சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான பொதுநலப் பணிகளை மேற்கொண்டு வந்த விஜய், தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய கட்சியை அறிவித்துள்ளார். இதனை அறிக்கை மூலம் மக்களிடம் பகிர்ந்த விஜய், தான் கமிட்டாகியுள்ள மேலும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
The greatest of all time படம்: தற்போது வெங்கட் பிரபுவின் The greatest of all time படத்தை நிறைவு செய்துவிட்டு, மேலும் தன்னுடைய தளபதி 69 படத்தையும் நிறைவு செய்யவுள்ளார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் அடுத்த மாதத்திலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தற்போது GOAT படத்தின் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரசிகர்களை சந்தித்த விஜய்: தற்போது புதுச்சேரியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் சூட்டிங் நடக்கும் இடத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை பேருந்து மீது ஏறி நின்று உற்சாகமாக சந்தித்த விஜய், கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்த பின்பு இந்த நிகழ்வு மூலம் அவர் ரசிகர்களை சந்தித்துள்ளார். அப்போது ரசிகர்கள் அவர்மீது மலர்களை தூவியும் தலைவரே என்று முழங்கியும் வரவேற்பு கொடுத்தனர். ஏராளமான ரசிகர்கள் அந்த இடத்தில் கூடியதால் பரபரப்பு காணப்பட்டது.
விஜய் அரசியல் என்ட்ரி: விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான சமூக பணிகளை மேற்கொண்டு வந்த விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது முன்னதாகவே கணிக்கப்பட்டதுதான் என்றாலும் தற்போது அவர் இதனை முறையாக அறிவித்துள்ளார். மேலும் இன்றைய தினம் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தனது நெஞ்சில் குடியிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி என்று அறிக்கைமூலம் உருக்கம் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அவர் தீவிரஅரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











