2வது தாயகமாக உணருகிறேன் துபாயில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரம் விருதுபெற்ற விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு துபாயில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.
ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என எதுவாக இருந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்று வருகிறார்.

பாலிவுட் படங்கள்
தற்போது தமிழில் கமல் நடிக்கும் விக்ரம், காத்துவாக்குல 2 காதல், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் செல்வாக்குமிக்க நடிகர் என்ற விருது துபாயில் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுமைகளுக்கு விருது
துபாயில் தனியார் நட்சத்திர ஓட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் சேதுபதிக்கு விருது
அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி வழங்கினார்.

2000ஆம் ஆண்டு துபாய் வந்தேன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, "நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். மிகப்பெரிய லட்சியங்களுடன் நான் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன். இங்குள்ள பர்துபாய், அல் பஹிதி சாலைகளில் எனது கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன். எனது அறைக்கு எதிரில்தான் மலபார் நிறுவனத்தின் கடை இருந்தது.

துபாய் என் இரண்டவது தாயகம்
இங்கு வந்தபிறகு இது ஒரு புதிய நாடு, வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2-வது தாயகமாக துபாயை உணர தொடங்கினேன். 3 ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பிறகு சென்னைக்கு சென்றேன். அதை தொடர்ந்து திருமணம் செய்தேன். பின்னர் சினிமாவில் நடித்து இந்த நிலைக்கு நான் வந்தது ஒரு விபத்தாகும்.

துபாய்க்கு வந்துள்ளேன்
சென்னையில் குடியேறிய பிறகு பலமுறை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக துபாய்க்கு வருகை புரிந்துள்ளேன். இன்றும் நான் வசித்த பகுதியை மறக்காமல் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். துபாய் நகரம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











