சந்தோசப்பட வேண்டிய நேரத்தில் விஷ்ணு விஷாலுக்கு இப்டி ஒரு சோகமா?
விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படம் ரிலீசாகி, இன்றுடன் பத்து வருடங்கள் ஆகியுள்ளது.
சென்னை: விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படம் ரிலீசாகி, இன்றுடன் பத்து வருடங்கள் ஆகியுள்ளது. இதனை மகிழ்ச்சியாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
தமிழில் தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு 'ராட்சசன்' என்ற வெற்றி படத்தைக் கொடுத்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிலுக்குவார் பட்டி சிங்கம் படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது பாராட்டுக்களைப் பெற்றது.
அப்படத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார் விஷ்ணு. அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக அவர் காயமடைந்தார்.

ஓய்வு:
இதில், அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு வாரங்கள் அவர் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் விஷ்ணு.
பயங்கர வலி:
இது தொடர்பான பதிவில் அவர், "கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலி பயங்கரமாக இருக்கிறது. கைகளிலும் வலி. சிகிச்சைக்குப் பின் நான்கு வாரம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் குணமாகி படப்பிடிப்பில் பங்கேற்பேன் என நம்புகிறேன். அதற்கு உங்கள் அன்பும், ஆசிர்வாதங்களும் தேவை'" என அவர் தெரிவித்துள்ளார்.

10 வருடங்கள்:
இது ஒருபுறம் இருக்க, அவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படம் ரிலீசாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. உடல் வலியால் அவதிப்பட்டு வரும் அவருக்கு, ஆறுதல் அளிப்பது போல் உள்ளது ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வரும் வாழ்த்துக்கள்.
ஹீரோ மெட்டீரியல்:
இதனால் தான் தமிழ் சினிமாவிற்கு வந்த கதையை இந்த நேரத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் விஷ்ணு. இது தொடர்பான பதிவில் அவர், "கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அந்த நேரத்தில் நான் ஒரு ஹீரோ மெட்டீரியல் இல்லை, நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க மாட்டேன் எனக் கூறினார்கள்.

நம்பிக்கை:
ஆனால், என் ரசிகர்கள் மீதும், என் படங்கள் மீதும் நான் மிகுந்த நம்பிக்கை வைத்தேன். ஒவ்வொரு படத்திலிருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்தப் பயணம் என்பது அவ்வளவு எளிதானதல்ல. நான் இன்னும் இங்கு இருக்கிறேன், இனியும் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தரமான 10 படங்கள்
மற்றொரு பதிவில், "எனது 13 படங்களில் பத்து படங்கள் தரமானவையாக தந்திருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு நம்பிக்கையும், கற்றலும் தான் கைக்கொடுத்தன. இப்போது தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது என நம்புகிறேன். எதிர்வரும் காலங்களில் நல்ல தரமான படங்களை தருவேன். என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி. இத்தனை வருடங்களில் இப்போது தான் எனது ரசிகர்கள் என முதன் முதலில் கூறுகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
உணர்வுபூர்வமான நாள்
மற்றொரு பதிவில் "சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என சுமார் ஆறு வருடங்களுக்கு மேல் முயற்சி செய்து, பிறகு 10 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் உணர்வுப்பூர்வமான நாள் இது என்று உணர்கிறேன். என்னை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும் போது எனது தந்தை முகத்தில் ஏற்படும் புன்னகையே எனக்கு ஊக்கமளிக்கும்" என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











