ரஜினியை வம்பிழுத்த தவெக.. அந்த வார்த்தையை சொல்லி விளாசிய ஜெயிலர் பிரபலம்.. விஜய்க்கு சுற்றிலும் அடி
சென்னை: தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதை தாங்கும் மன வலிமை அவருக்கு அப்போது இல்லை' என கூறினார். அது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவருமே ஆதவ் அர்ஜுனா, விஜய் மற்றும் தவெக கட்சியினருக்கு எதிராகவும், ரஜினிக்கு ஆதரவாகவும் பேச தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் இந்த சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்கப்போகிறாரா இல்லை கூட்டணியோடு சந்திக்கப்போகிறாரா என்பது இன்றிலிருந்து சில நாட்களுக்குள் தெரிந்துவிடும். எந்தக் கட்சியும் தங்கள் பக்கம் வராததாலும்; சங்கீதா விவகாரம், திரிஷாவுடன் ஒன்றாக வந்தது உள்ளிட்ட விஷயங்கள் இமேஜை கொஞ்சம் டேமேஜ் செய்திருப்பதாலும்; இத்தனை நாட்கள் உச்சபட்ச உறுதியோடு இருந்த விஜய் உள்ளிட்ட முக்கிய தலைகள் தற்போது கொஞ்சம் பதற்றத்திலும் பயத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி வைக்கும் தவெக?: இப்போதிருக்கும் நிலைமையில் தனித்து தேர்தலை சந்திப்பதைவிடவும் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கலாம் என முடிவெடுத்து; அதிமுக - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் விஜய் இருப்பதாகவும்; அதனால்தான் இன்று டெல்லியில் விசாரணை இருக்கும் நிலைமையில்; நேற்றே விஜய், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்றுவிட்டார்கள் என கூறப்பட்டது. அதேசமயம் இது அனைத்தும் போலியான தகவல்கள்தான்; கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என தவெகவினர் உறுதியோடு நம்ப தொடங்கியிருக்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு: இப்படி கூட்டணி குறித்த விஷயங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் ஆதவ் அர்ஜுனா. அப்போது பேசிய அவர், 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும்; இந்த சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் அவரை அப்போது திமுக குடும்பம் மிரட்டியது. அதனால் அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். அவருக்கு அதை தாங்கும் மன வலிமை அப்போது இல்லை.
விளாசும் ரஜினி ரசிகர்கள்: ஆனால் விஜய் அப்படி இல்லை. எப்போதும் பின்வாங்கமாட்டார் என கூறினார். அவரது இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது. ரஜினி இதுவரை ஏகப்பட்ட சம்பவங்களை அரசியல் களத்தில் செய்திருக்கிறார். ஜெயலலிதா உள்ளிட்டோரையே நேருக்கு நேராக எதிர்த்தவர். விஜய் மாதிரி கொடநாட்டுக்கு சென்று குளிரில் வெளியே காத்துக்கொண்டிருந்ததில்லை. ரஜினியை பற்றி பேசுவதற்கு தவெகவினருக்கு தகுதி இல்லை. இதையெல்லாம் விஜய் கண்டிக்கமாட்டாரா? ஏன் அமைதியாக இருக்கிறார்?.. எனில் இதை அவர் ரசிக்கிறாரோ என்று அவரையும் சுற்றி அடித்துவருகிறார்கள்.
சூப்பர் சுப்பு பதிவு: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ஹுக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு இந்த விஷயத்தில் மறைமுகமாக தவெகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நடத்துநர் இல்லாத பேருந்திலே மடக்கு ஊதிகளுக்கு வேலை இல்லை" என குறிப்பிட்டிருந்தார். மடக்கு ஊதி என்பது விசிலின் தூய தமிழ் பெயர். விசில்தான் தவெகவின் சின்னம் என்பது கவனிக்கத்தக்கது. அவரது இந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















