வரிசையாக 100 கோடி ரூபாய் வசூல்.. செம அட்வைஸ் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ஆளே மாறிட்டாரே
சென்னை: கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இப்போது சக்சஸ்ஃபுல் ஹீரோவாக மாறியிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று படங்களும் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளின. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருக்கு எல்ஐகே திரைப்படம் விரைவில் ரிலீஸாகிறது. இந்நிலையில் அவர் மாணவர்களுக்கு சூப்பர் அட்வைஸ் செய்திருக்கிறார்.
ரவி மோகனை வைத்து கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது படமான லவ் டுடேவில் ஹீரோவாக மாறினார். அப்படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். 2கே கிட்ஸுக்கான லவ் ஸ்டோரியாக அதை இயக்கியிருந்த அவர் நடிப்பிலும் அசத்தியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதெல்லாம் ஒரு லக்கில் வந்தது என்றும் சிலர் பேசினார்கள்.

லக் இல்லை திறமை: அந்தப் படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதுவும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அதனைத் தொடர்ந்து நடித்த டியூட் படமும் 100 கோடி க்ளப்பில் இணைந்தது. இரண்டு படங்களும் கமர்ஷியல் படங்களாக மட்டுமில்லாமல் சமூகத்துக்கு கருத்து சொல்லும் வகையில் அமைந்திருந்தன. இதன் மூலம் தனக்கு வெறும் லக் மட்டுமில்லை சரியான கதையை தேர்ந்தெடுக்கும் திறமையும், நன்றாக நடிக்கும் திறமையும் இருக்கிறது என்பதை உணர்த்தினார்.
விக்னேஷ் சிவனுடன்: வரிசையாக மூன்று படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து டாப் 10 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இப்போதைக்கு இருக்கிறார் அவர். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் எல்ஐகே திரைப்படம் விரைவில் வரவிருக்கிறது. இப்படத்தின் பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சில பிரச்னைகளால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. கண்டிப்பாக இந்தப் படமும் வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
மீண்டும் இயக்கம் எப்போது?: அவர் இப்போது ஹீரோவாக வெற்றி பெற்றாலும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை விட்டுவிடக்கூடாது என்பதுதான் பலரது நினைப்பு. அவரும் அந்த மைண்ட் செட்டில் இல்லை என்றே தெரிகிறது. விரைவில் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கவிருப்பதாகவும்; அதிலும் அவர்தான் ஹீரோவாக நடிப்பார் எனவும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அட்வைஸ் செய்த பிரதீப் ரங்கநாதன்: இந்நிலையில் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மாணவர்களிடம் பேசுகையில், "நான் கல்லூரி படிக்கும்போது எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருப்பேன். அதற்காக நாம் வருத்தப்பட தேவையில்லை. வாழ்க்கையில் ஒரு பாயிண்ட் வரும். அந்த பாயிண்ட் வந்தால் உலகமே நம்மை வேடிக்கை பார்க்கும். அந்த பாயிண்ட் வரும்வரை ஜாலியா, நிம்மதியா மற்றவர்களை நாம் வேடிக்கை பார்ப்போம்" என்றார்.


Click it and Unblock the Notifications











