கார் ரேஸ் - 7வது இடத்தைப் பிடித்த அஜீத்!

நடிகராக அறியப்படுவதற்கு முன்பே கார்ப் பந்தய வீரராக இருந்தவர் அஜீத். ரேஸ் என்றால் அஜீத்துக்கு அல்வா சாப்பிடுவது போல.
நடிகரான பின்னரும் கூட ரேஸை அவர் விடவில்லை. அவ்வப்போது ரேஸுக்குப் போய் விடுவார். ஆனால் ஒரு கட்டத்தில் இரட்டைக் குதிரை சவாரி சரிப்பட்டு வராது என்று அவருக்கு வேண்டியவர்கள் அட்வைஸ் செய்ததால் நடிப்பை தேர்ந்தெடுத்தார், ரேஸை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் தற்போது திடீரென அஜீத்துக்கு ரேஸ் மீது மீண்டும் நாட்டம் வந்து விட்டது.
6 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஆர்.எப். பார்முலா 1600 பிரிவு கார் ரேஸில் கலந்து கொண்டார். இருங்காட்டுக்கோட்டையில் நடந்த இந்தப் பந்தயத்தில் அஜீத் பங்கேற்றார்.
முதல் பந்தயத்தில் அவரது காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விலகினார். இதனால் 2-வது பந்தயத்தில் (15 ரவுண்டு) பங்கேற்றார். இதில் அஜீத்குமார் 7-வது இடத்தை பிடித்தார்.
அஜீத் கார்ப் பந்தயத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். வெற்றி பெறாவிட்டாலும் கூட தங்களது 'தல' அசத்தலாக போட்டியை முடித்ததை நினைத்து ரசிகர்கள் பெருமைப்பட்டனர்.
எம்.ஆர்.எப். பார்முலா 1600 பிரிவின் 2 பந்தயத்திலும் சென்னை வீரர் அஸ்வின் வெற்றி பெற்றார். முதல் பந்தயத்தில் கிறிஸ் உட்டன் 2-வது இடத்தையும், பார்த்தீவ் சுரேஸ்வரன் 3-வது இடத்தையும், 2-வது பந்தயத்தில் கவுரவ்கில் 2-வது இடத்தையும், அர்ஜூன் பாலு 3-வது இடத்தையும் பிடித்தனர்.


Click it and Unblock the Notifications











