அஜித் இதற்காகத்தான் இப்போது நிறைய பேட்டி கொடுக்கிறாராம்.. அவரே சொன்ன சூப்பர் காரணம்
சென்னை: அஜித்குமார் ஒருபக்கம் சினிமா, மறுபக்கம் கார் ரேஸ் என பிஸியாக இருக்கிறார். துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த ரேஸில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அவர் இப்போது பிரேசிலில் நடக்கும் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்கிடையே அவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. சூழல் இப்படி இருக்க நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் அவர்.
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் குட் பேட் அக்லி மட்டும்தான் சூப்பர் ஹிட்டடித்தது. அதுவும் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்த அந்தப் படம் வசூல் ரீதியாகத்தான் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ், விஷ்ணுவர்தன் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே கார் ரேஸில் இப்போது தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தனது ரேஸிங் டீமுடன் துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கும் அவர் அடுத்ததாக பிரேசிலில் நடக்கவிருக்கும் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதற்காக அங்கு சென்றிருக்கும் அவர்; தனது ரோல் மாடல் மற்றும் கார் ரேஸரான சென்னாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலியும், மரியாதையும் செலுத்தினார்.

பத்ம பூஷன் அஜித்: இப்படி சினிமா, கார் ரேஸ் என பிஸியாக இருக்கும் அஜித்குமாருக்கு ஒன்றிய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதினை வழங்கியது. அதனை தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள், சகோதரருடன் சென்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார். பத்ம பூஷன் விருது பெற்ற அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க பெரிதாக பேட்டி எதுவும் கொடுக்காததை வழக்கமாக வைத்திருக்கும் அஜித்துக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ தொடங்கியிருக்கின்றன.
அஜித் பேட்டி: கார் ரேஸில் வென்ற பிறகு பந்தயம் நடந்த இடத்தில் வைத்து பேட்டி கொடுத்த அவர்; அடுத்ததாக பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், "நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்வரை ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் ஒரு படம் நடிக்க முடிந்தால் ஒவ்வொரு ஆண்டும் என்னால் ஒரு படத்தை வெளியிட முடியும். இப்படி செய்தால்தான் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரேஸிங்கில் எனது கவனம் இருக்கும். அது அணியின் உரிமையாளராகோ, ஓட்டுநராகவோ இருந்தாலும் சரி. ஒரு நடிகராக எனக்கென்று இருக்கும் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ரேஸிங் மற்றும் நடிப்பு இரண்டுக்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்குவது என்பது எனது திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற விமர்சனத்தை வைப்பவர்களை அமைதிப்படுத்தும்.
இதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்: ஒருகாலத்தில் நான் அதீத உடல் எடையுடன் இருந்தேன். ஆனால் ரேஸிங்கிற்கு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்த நாளிலிருந்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்றுவரை நான் 42 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன்" என்று பல விஷயங்களை பேசினார். அவர் பேட்டியளித்ததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
கார் ரேஸின் முக்கியத்துவம்: இந்நிலையில் எதற்காக அதிகம் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பது குறித்து அஜித்குமார் விளக்கமளித்திருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்திய ஊடகங்களை பொறுத்தவரை அரசியல், சினிமா, கிரிக்கெட் போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அவர்களது கவனம் திரும்ப இன்னும் நிறைய காலம் ஆகும். நான் கலந்துகொள்ளும் Endurance ரேஸிங் என்பது எங்கள் அணிக்கே புதிதான் ஒன்றுதன. இந்திய மக்களுக்கு அதுகுறித்து புரிதலை உருவாக்கத்தான் நிறைய பேட்டிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











