குஷ்பு- சுந்தரி சி படத்தை மறுத்தாரா அஜீத்?
கணவர் சுந்தர் சி இயக்கம், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு கேட்டு வந்த நடிகை குஷ்புவை, கதை கூட கேட்காமல், நாசூக்காக திருப்பி அனுப்பிவிட்டார் அஜீத் என தகவல் வெளியாகியுள்ளது.
அஜீத் நடித்த வீரம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால் படத்தில் நடித்ததோடு சரி.. அது தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அஜீத், குடும்பத்துடன் வெளிநாடு பறந்துவிட்டார் ஓய்வுக்காக.

அங்கேயே மகளின் 6வது பிறந்தநாளையும் உற்சாகமாக கொண்டாடினார். வீரம் படம் வெளியாகும் ஒருநாள் முன்பாக அதாவது வரும் 9ம் தேதி இரவுதான் அஜீத் சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் அஜீத் குறித்து ஒரு தகவல் கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்துள்ளது.
அஜீத் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு முந்தைய நாள் அவரை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் அவருடைய வீட்டுக்கு சென்று சந்தித்தாராம்.
அப்போது குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது. கதை ரெடி.. இப்பவே கேக்கறீங்களா? என்றாராம்.
ஆனால் அஜீத் பிடி கொடுக்கவில்லையாம். கவுதம் மேனன் படம் முடிந்ததும், வெங்கட் பிரபு படம்... இந்த இரண்டும் முடியாமல் எதையும் முடிவு செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம்.
மேலும், 'மேம்.. எதுவாக இருந்தாலும் நானே முடிவு செய்து அழைப்பதுதான் வழக்கம். நான் வெளிநாடு சென்று வந்ததும், உங்களுடன் பேசுகிறேன். நன்றி,' என்று கூறி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அஜீத் ஏற்கனவே திமுக ஆட்சியின்போது கசப்பான அனுபவம் பெற்றவர். ஒரு பக்கா அதிமுக அனுதாபி என்ற இமேஜுக்குள் இருப்பவர். திமுகவில் முக்கிய பிரமுகரான குஷ்பு தயாரிப்பில் நடிக்கப் போய், தேவையில்லாத பிரச்சினைகள் எதற்கு என்பதுதான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த செய்திகளுக்கான குஷ்புவின் பதிலை எதிர்ப்பார்த்து அவரது khushsundar ட்விட்டர் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்!


Click it and Unblock the Notifications











