Ajith: அஜித்குமார் கலந்து கொள்ளும் ரேஸில் இவ்வளவு சவால்கள் இருக்கா? 24 மணி நேரமும் கார் ஓட்டணுமாம்!
துபாய்: நடிகர் அஜித்குமார் இந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸிற்காக ஒதுக்கிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் இந்த கார் ரேஸில் கலந்து கொள்ளும் அஜித்குமார் மற்றும் அவரது அணிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில், அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் ரேஸ் எந்த வகையானது. அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதில் என்னவெல்லாம் சிக்கல்களும் சவால்களும் ஆபத்துகளும் உள்ளது என்பது குறித்து, இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமார் ஐரோப்பிய கார் பந்தயமான ஜி.டி 4 ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகி வந்தார். இதற்காக தனது பெயரில் ஒரு அணியை உருவாக்கி தீவிரமான பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படியான நிலையில் இன்று அவரது அணி கார் பந்தயத்தில் களமிறங்குகின்றது. கிட்டத்தட்ட 15ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித் கார் ரேஸில் களமிறங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் தொடங்கி பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளனர்.

கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித்தின் கார் வேகமாக தடுப்புச் சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அவருக்கு அந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கார் மட்டும் இல்லாமல், ஸ்டாண்ட் பை கார்கள் இருப்பதால் அஜித்குமார் அணி ரேஸில் பங்கேற்பதில் சிக்கல் இல்லை என தகவல்கள் வெளியானது.
அஜித்குமார் ரேஸிங்: அஜித்குமார் அணி கலந்து கொள்ளும் கார் ரேஸ் என்பது, எண்டுரன்ஸ் பார்மட் ரேஸ். இந்த வகை ரேஸானது, 24 மணி நேரம் நடக்கும். அதாவது இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும் இந்த வகை ரேஸ் நாளை மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த 24 மணி நேரத்திற்குள் எந்ததெந்த அணிகள் அதிக தூரத்தை கவர் செய்கின்றார்களோ அந்த அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
24 மணிநேரம்: இந்த பந்தயத்தில் களமிறங்கும் ஒவ்வொரு ரேஸரும், சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காரினை இயக்குவார்கள். இவ்வளவு வேகத்தில் செல்லும் கார்களில் யாராவது ஒருவர், தவறு செய்தால், ஓடுதளத்தில் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்ப்பது என்பதே அச்சத்தை மனதில் ஏற்படுத்துகின்றது. இதுமட்டும் இல்லாமல், 24 மணி நேரமும் ஒருவரே ஓட்டவேண்டும் என்று இல்லை.
விதிமுறைகள்: ஒரு அணியில் குறைந்த பட்சம் 3 வீரர்கள் முதல் அதிக பட்சம் 5 வீரர்கள் வரை இருப்பார்கள். அஜித்குமாரின் அணியில் அஜித்குமார், ஃபெபின், மேத்யூ மற்றும் காம் என மொத்தம் நான்கு வீரர்கள் உள்ளார்கள். இவர்கள் நான்கு பேருமே மாற்றி மாற்றி கார் ஓட்டுவார்கள் என்பதால், ஒருவர், குறைந்தது 6 மணி நேரமாவது கார் ஓட்டவேண்டும்.
சவால்கள்: இதில் மிகவும் அக்கறை செலுத்தவேண்டிய விஷயங்களில் ஒன்று, காரின் தரத்தை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். காரின் ரெஸ்டிங் பீரியட் என்பது 45 நொடிகள் முதல் 55 நொடிகள் வரைதான். இந்த கால அவகாசத்திற்குள் அந்த காரின் சக்கரங்களை மாற்றவேண்டும். காருக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். காரில் வேறு எதாவது சிக்கல் ஏற்பட்டுள்ளதா என பரிசோதிக்க வேண்டும். ஒரு வீரர் மாற நினைக்கின்றார் என்றால் இந்த கால அவகாசத்திற்குள்தான் மற்றொருவரை மாற்றி விடவேண்டும் இப்படியான சவாலும் இந்த கார் ரேஸில் உள்ளது. இவ்வளவு சவால்கள், ஆபத்துகள் சிக்கல்கள் இருப்பதைத் தெரிந்த பின்னரும் அஜித்குமார் இதில் களமிங்கியுள்ளார். அவருக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications











