A.K: அஜித் ஜாதகத்துல குரு உச்சத்துல இருக்காரு.. குடும்பம்- சினிமா - கார் ரேஸ்.. நின்னு விளையாடுறாரே!
சென்னை: மே 1 என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்று கூறலாம். இதற்கு காரணம் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள். தனது ஆர்வமும் திறமையும் நம்பிக்கையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு தமிழ் சினிமாவிற்குள் 32 ஆண்டுகளுக்கு முன்னர் காலடி எடுத்து வைத்த அஜித் குமார் இன்று அதாவது மே 1ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஜித் குமாருக்கு இந்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு அவரது ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களே அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.
அஜித் குமாருக்கு இந்த ஆண்டு தொடங்கும் போது மட்டும் தான் கொஞ்சம் சறுக்கலில் தொடங்கியது. இன்னும் சொல்லப்போனால் அது இந்த ஆண்டின் முதல் நாள் என்பதைக் காட்டிலும் கடந்த ஆண்டின் கடைசி நாள். டிசம்பர் 31ஆம் தேதி, வெளியான அறிவிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கபப்ட்டிருந்த, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது. படம் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளைப் பெற்றது.
அஜித்திற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு எனக் கூறக் காரணம், அஜித்திற்கு சரிவில் இருந்து மீண்டு வருவதோ, தோல்வியில் இருந்து வெற்றிக்கு வருவதோ பெரிய விஷயமில்லை. அப்படித்தான் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களும் அவருக்கு மாறியுள்ளது. விடாமுயற்சி படம் ஏற்படுத்திய சரிவு மிகப்பெரிய தோல்வியை அஜித்திற்கு கொடுத்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் அவரது குட் பேட் அக்லி படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது. இன்னும் சொல்லப்போனால், அஜித்தின் மாஸ் கம்பேக் படமாக மாறியது. இந்த படம் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து எடுக்கப்பட்ட படம் என்பதால் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கார் ரேஸ்: அஜித் சினிமாவைக் கடந்து மற்றொரு விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் என்றால் அது, கார் ரேஸ். இவர் தற்போது ஜி.டி. 4 ரக கார் ரேஸில் தனது பெயரில் அணி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது, அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் இவர் தொடங்கியுள்ள அணி, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் அவரது அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
தைரியம்: ஆனால் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர் அஜித் குமார் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவரது கார் வேகமாக பக்கவாட்டுச் சுவரில் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்த அஜித் குமார் துபாய் ரேஸில் களமிறங்கி அசத்தினார். மேலும், ஒரு கேப்டனாகவும் தனது அணிக்கு வெற்றிகளைக் குவித்து வருகிறார். துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற ஜி.டி. 4 ரக கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித் குமார் ரேஸிங் அணி, அதன் பின்னர் பெல்ஜியமில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ரேஸில் இரண்டாவது இடம் பிடித்தது. இவரது ரேஸிங் அணி கார் ரேஸில் இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடம், ஒரு முறை இரண்டாவது இடம் என நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.

தேசிய கொடி: அஜித் தனது அணி வெற்றி வாகை சூடும் போது எல்லாம் நமது நாட்டு தேசியக் கொடியுடன் வருகை தந்து, நாட்டை சர்வதேச அளவில் கார் ரேஸில் அடையாளப்படுத்தி வருகிறார். இவரது வெற்றிகளை தங்களது வெற்றிகளாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் அஜித் குமார், கடந்த 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி தனது 25வது திருமண நாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாட சென்னைக்கு வந்தார். இருவரும் கேக் வெட்டி தங்களது திருமண நாளைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
ஷாலினி: அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட அறிமுகம், நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

பத்ம பூஷன்: அஜித் கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம பூஷன் விருதை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கரங்களில் பெற்றுக் கொண்டார். இந்த விருது இவருக்கு கலைத்துறையில் சிறந்து பணியாற்றி வருவதற்கு பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருதினை தனது குடும்பத்தினருடன் சென்று பெற்றுக் கொண்டார் அஜித் குமார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேகமாக இணையத்தில் பரவியது.
உச்சம்: இந்த ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை அஜித்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவாக மட்டுமே நடைபெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், அஜித்தின் உச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் அஜித்தின் ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கிறார் அதனால்தான் அஜித்திற்கு தொட்டது எல்லாம் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வருகிறது என பேசுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கிறதோ எனவும் பேசி வருகிறார்கள்.

ஜாதகம்: அதே நேரத்தில் அவரது ரசிகர்களோ! அஜித் குமார் இந்த நிலைக்கு வர அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் எதற்கும் அஞ்சாத மன தைரியமும் தான் என பதில் அளித்து வருகிறார்கள். மேலும் அஜித்தின் ரசிகர்களில் இருக்கும் பகுத்தறிவுவாதிகள், அஜித்தின் இத்தனை ஆண்டுகால முயற்சிக்கும் கடின உழைப்புக்கும், அன்புக்கும் தகுதியானவற்றை அவர் பெற்று வருகிறார். இதற்கு காரணம் கடந்த குருப்பெயர்ச்சியில் இடம் மாறிய குரு எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என பேசி வருகிறார்கள். கடந்த நான்கு மாதங்கள் போலவே எதிர் வரும் ஆண்டும் அமைய வாழ்த்துகள். அவரது 54 வது பிறந்த நாளுக்கு ஃபிலிமி பீட் தமிழ் சார்பாகவும் வாழ்த்துகளும் அன்புகளும்.


Click it and Unblock the Notifications











