Sivakarthikeyan: அப்பாவை இழந்த சிவகார்த்திகேயனின் ஹீரோடா மொமண்ட்.. கேட்கும்போதே புல்லரிக்குதே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நன்கு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், வசூல் மன்னனாகவும் உருவெடுத்து வருகின்றார். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருப்பதால் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். சிவக்கார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ளார். இந்நிலையில் படக்குழு அண்மையில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிந்து கொண்டார் அது குறித்து பார்க்கலாம்.
அந்த பேட்டியில், “ சில நேரங்களில் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பார்க்கும்போது ’ஐ.. நம்மலும் ஹீரோல எனத் தோனும். ஆனால் அமரன் படத்தின் முதல் காட்சி நடித்து முடித்ததும் எனக்கு ’நம்ம ஹீரோடா’ என்ற உணர்வு வந்தது. ஏனென்றால் எனது மார்பில் நான் அணிந்துள்ள உடையில் முகுந்த் என்ற பெயர் இருக்கின்றது. மேலும் நேரடியாக இந்திய ராணுவத்தின் இடத்திற்கே சென்று படப்பிடிப்பு நடத்தினோம். எங்களைச் சுற்றிலும் ராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள்.

டீசரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி, அதாவது ' Who Are We' என்ற காட்சி படமாக்கி முடிந்ததும் எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. மேலும் அந்தக் காட்சி படமாக்கி முடிந்ததும், எங்களைச் சுற்றி நின்று கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் கைதட்டினார்கள். மேலும் அவர்கள் எங்களிடம் கூறுகையில், ' நீங்கள் தமிழில் பேசுகின்றீர்கள். உங்கள் மொழி எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் எங்களுக்கு புல்லரிக்கின்றது’ எனக் கூறினார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. இது எல்லாவற்றையும் ஆடியன்ஸுக்கு கரெக்ட்டா கடத்திவிடவேண்டும் என ஒரு குழுவாக நாங்கள் வேலை செய்துள்ளோம். மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன் எனக் கூறமாட்டேன், மிகவும் விருப்பப்பட்டு, என்ஜாய் செய்து நடித்தேன்.
கஷ்டம்: ஏனென்றால் ராணுவ வீரர்கள் காஷ்மீர் தொடங்கி பல இடங்களில் அவர்கள் படும் கஷ்டத்தின் முன்னால் நாம் படும் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதற்கு உண்மையாக நாங்கள் உழைத்திருக்கின்றோம். சாய் பல்லவியும் மிகவும் சிறப்பாக அதைச் செய்துள்ளார். இந்து ராஃபேகா ரஃபீஸாகவே அவர் வாழ்ந்துள்ளார். எனக்கு முகுந்தின் மனைவியைப் பார்க்கும்போது எனது அம்மாவைப் பார்ப்பதைப் போலவும், அக்காவைப் பார்ப்பதைப் போலவும் இருந்தது.

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை: இவரின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகின்றார் என்பது எனக்குத் தெரியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ராஜ்குமார் பெரியசாமி சொல்லித்தான் சாய் பல்லவி நடிக்கின்றார் எனத் தெரியும். எனது அப்பாவும் வேலையில் இருக்கும்போது இறந்துபோனார். ஆனால் எனது அப்பா போருக்குச் செல்லவில்லை, சண்டையிடவில்லை, வேலைப்பழு காரணமாகவே இறந்துபோனார். திடீரென ஒருநாள் வந்து இன்றையில் இருந்து உங்களுக்கு அப்பா இல்லை எனக் கூறினார்கள். அதன் பின்னர் அம்மா, அக்கா மற்றும் நான் என நாங்கள்தான் எங்கள் வாழ்க்கை என மாறிவிட்டது.
சமாளிக்கவே முடியாது: எனது அப்பா இறக்கும்போது அவருக்கு வயது 50. அதேபோல் முகுந்த் அவர்கள் இறந்தபோது அவருக்கு வயது 30. எந்த கஷ்டத்தை வேண்டுமானாலும் சமாளித்துவிடலாம், ஆனால் ஒருவர் இல்லை எனும் கஷ்டத்தை சமாளிக்கவே முடியாது. இதனாலே நான் இந்துவிடம் அதிகம் பேசவில்லை. அவரிடம் இருக்கும் சில குணாதிசயங்களை எனது வாழ்க்கைக்கு எடுத்துச் செல்கின்றேன். இந்தப் படத்தை எனது அம்மாவுக்கும் அக்காவுக்கும் காட்ட காத்துக்கொண்டு உள்ளேன்” என பேசினார். சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











