யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!
திருவனந்தபுரம்: 26 யானைத் தந்தங்களை வீட்டுக்குள் வைத்திருந்த மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது தரலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு.
நடிகர் மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க கேரள அரசு பரிந்துரை செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யானை தந்தங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்ததாக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி 13 ஜோடி யானை தந்தங்களையும் கைப்பற்றினார்கள். இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் பேட்டி அளித்த மோகன் லால், யானை தந்தங்கள் கடந்த 26 வருடங்களாக எனது வீட்டில் உள்ளன. இது குறித்து பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்துள்ளன. இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ள்ன. இது சட்டவிரோதமானதும் அல்ல," என்றார்.
தற்போது பேட்டி அளித்த மோகன்லால் இது வன சட்டப்படி எனது நண்பர்கள் இதை எனக்கு பரிசாக அளித்தனர், என்றார்.
இந்த நிலையில் மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்த்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த அமைப்பின் செயலாளர் பி.கே. வெங்கடாசலம் இதுகுறித்துக் கூறுகையில், "மோகன்லால் 13 ஜோடி யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தார். கொச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வனத் துறையினர் இவற்றைக் கைப்பற்றினார்கள். யானை தந்தங்கள் வைத்துக் கொள் வதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான லைசென்ஸ் அவர் வாங்கவில்லை.
இந்த வழக்கில் மோகன் லால் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அவருக்கு உயரிய பத்மபூஷன் விருதை கொடுக்க கூடாது," என்றார்.


Click it and Unblock the Notifications











