கை மாறிய துப்பாக்கி.. விஜய் சார் இடத்தில் நானா? அது சிவகார்த்திகேயனின் தந்திரம்.. உண்மை இதுதான்!
சென்னை: செப்டம்பர் மாதம் வெளியான கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.அந்த காட்சியில் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால், விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்வதால், சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறிவந்தனர். இதுகுறித்து பேசிய அந்தனன் இதுதான் சிவகார்த்திகேயனின் தந்திரம் என்றார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்,சிவகார்த்திகேயன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் சார் இடத்தில் நானா?: அந்த காட்சில், “துப்பாக்கியை பிடிங்க சிவா. இனிமேல் எல்லாம் உங்க கையிலதான் இருக்கு” என்று சொல்லுவார். அதற்கு சிவா “இதை விட பெரிய வேலை எதுக்கோ போறீங்க. இதை நான் பாத்துக்குறேன். அதை நீங்க பாருங்க” என்பார். சிவாவின் வசனத்துக்கு விஜய் சார் கையைக் காட்டிவிட்டு செல்வார். விஜய் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே இந்த காட்சி இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டது. தனக்கு பின்பு சிவகார்த்திகேயன் தான் என்று விஜய் இந்தக் காட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் தந்திரம்: இந்த காட்சி குறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தனன், இயக்குநர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறார். இதனால், கோட் படத்தில் அவருக்கு ஒரு காட்சி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துத்தான் அந்த காட்சியை படத்தில் வைத்தார். இப்படி ஒரு காட்சி இருக்கு அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார் என்று சொன்னது எல்லாமே இயக்குநர் தான். விஜய், இந்த வசனத்தை வைங்க, இந்த நடிகரை போடுங்க என்று சொல்லவில்லை. ஆனால், படம் வெளியான பிறகு, விஜய் சினிமா கேரியரை மொத்தமாக தூக்கி சிவகார்த்திகேயன் கையில் கொடுத்தது போல ஒரு பில்டப்பை உருவாக்கியது சிவகார்த்திகேயன். அது தான் சிவகார்த்திகேயனின் தந்திரம்.
ரஜினி வேண்டாம் என்றார்: இதனால், அஜித், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற நடிகர்களை தங்களது படத்தில் சேர்ப்பது இல்லை. ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், ரஜினி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏன் என்றால், பின்னால் இதுபோன்ற பேச்சுவரும் என்று ரஜினிக்கு நன்றாக தெரியும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











