Ilayaraaja - இளையராஜா பயோபிக்.. சிபாரிசு செய்த தனுஷ்.. ஓகே சொன்ன இசைஞானி.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் குறித்த புதிய தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா. பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக்க ஆரம்பித்தனர்.

பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.
நாடகங்களிலும்: மேடையில் வாசிப்பாளராக மட்டுமின்றி பல நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி வாத்தியங்கள் ஏதும் வாங்க பணம் இல்லாததால் வெறும் பூட்டுக்களை வைத்துக்கொண்டு மட்டுமே இசையமைத்த வரலாறு எல்லாம் ராஜாவுக்கு உண்டு. அவர் இசையை வாத்தியங்களிலிருந்து எடுக்காமல் தனது வாழ்க்கையிலிருந்து எடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர் ஜன கான ராஜாவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர்கூட கதையாசிரியர் ரத்னவேலு அளித்த பேட்டியில் இளையராஜா மீது பெரும் வன்மத்தை கக்கினார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.
கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக் எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிபாரிசு செய்த தனுஷ்: இந்த பயோபிக்கை பால்கி இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறுமாதிரியாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதாவது இந்த பயோபிக்கை மாரி செல்வராஜ் அல்லது அருண் மாதேஸ்வரன் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று இளையராஜாவிடம் தனுஷ் சிபாரிசு செய்ததாகவும்; அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இளையராஜா, அருண் மாதேஸ்வரனை இயக்குநராக செலக்ட் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











