“பார்டர்“ இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு… ஐபாட் பரிசளித்த அருண்விஜய் !
சென்னை : 'பார்டர்' திரைப்படம் முடிவடைந்த மகிழ்ச்சியில் உள்ள அருண் விஜய், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு ஐபாட்டை பரிசாக அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய், பார்டர், அக்னி சிறகுகள், யானை, வா டீல், பாக்ஸர், சினம் உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதில், வா டீல் திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் வா டீலும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது.

பார்டர்
குற்றம் 23 படத்துக்குப் பின் அருண் விஜய், அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரியும் படம் பார்டர். இத்திரைப்படம் நவம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளி முடிந்து, 2 வாரங்கள் கழித்து படம் வெளியாகவுள்ளது.

ராணுவ அதிகாரி
இப்படத்தில் அருண்விஜய் ஒரு இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.

அன்பு பரிசு
இந்நிலையில், பார்டர் முடிவால் மகிழ்ச்சியடைந்த அருண் விஜய், அப்படத்தின் இயக்குனர் அறிவழகன் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஆகியோருக்கு ஐபாட் புரோவை பரிசளித்துள்ளார்.

மனமார்ந்த நன்றி
இதுகுறித்து ஒளிப்பதிவாளர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்தை பகிர்ந்து, ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறார் என்றும் சிறப்பு பரிசளித்த அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என கூறிய அவர், பார்டர் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

யானை
இயக்குநர் ஹரியும் அருண் விஜய் முதன்முறையாக யானை படத்தில் இணைந்துள்ளனர். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக கேஜிஎஃப் புகழ் கருடா ராம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











