மிஷன் சாப்டர் 1 வெற்றி..திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி சொன்ன அருண் விஜய்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவரான விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய். இவர், 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமா ஆசை கொண்ட ஒவ்வொருவருக்கும் சினிமாவில் எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற வெறி இருக்கும். அப்படி வெறியுடன் வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகர் அருண் விஜய். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரியதாக வரவேற்பை பெறாததால், ராசி இல்லாத நடிகர் என பெயர் எடுத்தார். சூர்யா, கார்த்தி, தனுஷ் இவர்களுக்கு முன்பாகவே சினிமாத் துறையில் வந்துவிட்டாலும், அவருக்கென்று சரியான கதை அமையாததால் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்ற காரணத்தினால் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய படம்: தொடர்ந்து பல படங்களில் கமிட்டான அருண் விஜய், ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டுமல்லாது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அருண் விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால், இந்த படத்தில் அருண் விஜய் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் அவதாரத்தில் நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார். அதிலிருந்தே தொடர்ந்து செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்களில் தொடர்ந்து வில்லனாக மிரட்டினார்.

மிஷன் சாப்டர் 1: அண்மையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய் ஹீரோவாக மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்தார். இந்த படம் பொங்கல் பாண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீசானது. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இந்த படத்தில் நடிகைகள் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க முழுக்க முழுக்க அடுத்தது என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்போடு இந்த திரைப்படம் அமைந்திருந்தது.

சாமி தரிசனம்: இந்த படம் கொடுத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் அருண் விஜய் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் நடிகர் அருண் விஜய் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வணங்கான்: தற்போது, அருண் விஜய் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து அருண் விஜய் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றொரு கையில் விநாயகர் சிலைகளை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படம் அருண் விஜய்யின் திறமையை நிரூபிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











