என்னது 45 நாள் கழிச்சு கதை சிக்கியதா?.. அப்போ விஷால் நிலைமை?.. அவன் இவன் கூத்தை ஷேர் செய்த ஆர்யா
சென்னை: இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடந்த வருடத்தில் வணங்கான் திரைப்படம் வெளியானது. முதலில் சூர்யாதான் ஹீரோவாக கமிட்டானார். ஆனால் அவர் விலகிவிட; அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். பாலாவின் இயக்கம் என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு இதுவரை வரவில்லை.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக மாறியவர் பாலா. விக்ரமை வைத்து சேது, சூர்யாவை வைத்து நந்தா, பிறகு இரண்டு பேரையும் சேர்த்து வைத்து பிதாமகன், ஆர்யாவை வைத்து நான் கடவுள் என இவர் இயக்கிய படங்கள் அத்தனையும் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கின்றன. யாரும் யோசிக்க மறந்த அல்லது மறுக்கும் விஷயங்களையே தன்னுடைய படத்தின் கதையாக தேர்ந்தெடுப்பார் பாலா.

திடீரென சறுக்கிய பாலா: அதனாலேயே அவரது படங்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றன. பாலா இயக்கத்தில் நடிப்பதை ஒரு கௌரவமாகவே அவர் பீக்கில் இருந்தபோது பல நடிகர்கள் நினைத்தார்கள். அப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர், பரதேசி படத்துக்கு பிறகு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் படத்தை கொடுக்கவில்லை. எப்படி இருந்த பாலா இப்படி ஆகிவிட்டாரே என்று நொந்துகொண்டார்கள் அவரது ரசிகர்கள்.
விக்ரம் மகனை வைத்து: மேலும் பெர்சனல் வாழ்க்கையிலும் விவாகரத்து பெற்ற அவர் இப்போது தனியாக இருக்கிறார். அந்த சமயத்தில்தான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கினார். அவர் இயக்கியது பிடிக்காததால் இன்னொரு இயக்குநரை வைத்து மீண்டும் அந்தக் கதையை இயக்க வைத்தார் விக்ரம். இதை பார்த்த பாலா ரசிகர்களோ, விக்ரமுக்கு சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்ததே பாலாதான். அவரையே இப்படி அவமானப்படுத்திவிட்டாரே என்று புலம்பினார்கள்.
வணங்கான் பாலா: அந்தப் பிரச்னைக்கு பிறகு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். சூர்யாவும் சில நாட்கள் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார். அதனையடுத்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை முடித்தார். ஆனால் அதுவும் ஹிட்டாகவில்லை. அடுத்ததாக அவர் என்ன படம் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு இதுவரை வரவில்லை. இந்நிலையில் ஆர்யா கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆர்யா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் விஷாலிடம்,'மச்சான் பாலா சார் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் சொல்லியிருக்கிறார்' என கூறினேன். அதற்கு விஷால், 'ஓ சூப்பர் மச்சான் நடிக்கிறேன்' என சொல்லிவிட்டார். அதற்கு பிறகு பாலாவுக்கு ஃபோன் செய்து, சார் ஒருத்தன் சிக்கிட்டான் என்றுதான் சொன்னேன். பிறகு விஷாலை வைத்து படத்தை ஸ்டார்ட் செய்தார் பாலா சார். ஷூட்டிங்கின் முதல் நாளில் விஷாலுக்கு ஃபோன் செய்து ஆல் தி பெஸ்ட் சொன்னேன். பிறகு மாலை ஃபோன் செய்து, 'ஷூட்டிங் எப்படி போனது' என்று கேட்டதற்கு,'இல்லை மச்சான் நான் இன்னும் கேரவனில்தான் இருக்கிறேன்' என கூறினார்.
45 நாட்கள்தான் கதையே: நான் மீண்டும் ஆல் தி பெஸ்ட் சொன்னேன். ஒரு மாதம் கழித்து விஷால் எனக்கு ஃபோன் செய்து, 'மச்சான் நீ சீக்கிரம் வந்துடு டா.. ஷூட்டிங் முடியப்போகுது.. நீ வருவதற்குள் ஷூட்டிங் முடிந்தாலும் முடிந்துவிடும்' என சொன்னார். நானும் அதற்கு பிறகு சென்றேன். நான் சென்றபோது அங்கே விஷால் இல்லை. விஷால் எங்கே என்று கேட்டேன். அதற்கு பாலா சாரோ, 'நான் அவரை வைத்து ஷூட் செய்தேன். ஆனால் விஷால் என்ன செய்தாலும் விஷால் மாதிரியே இருக்கிறது. அதனால் சென்னைக்கு அனுப்பிப் கண்கள், பற்களில் எல்லாம் கொஞ்சம் மாறுதல் செய்ய சொல்லியிருக்கிறேன் என கூறினார்.
அதற்கு நான், சரி சார் அப்போ அத 45 நாட்கள் ஷூட் என்று கேட்டேன். உடனே அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டார். இது விஷாலுக்கு தெரியுமா என நினைத்துக்கொண்டேன். பிறகு சில நாட்கள் கழித்து விஷாலும் வந்தார். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு உதவி இயக்குநர் வந்து, 'சார் கதை சிக்கிவிட்டது' என கூற; விஷால் என்னை அப்படியே திரும்பி மெதுவாக பார்த்தார். நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
