ஃபிலிம்ஃபேர் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்.. எல்லா ஹீரோக்களையும் விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: அமரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதுதான் அவர் வாங்கும் முதல் ஃபிலிம்பேர் விருது என்பது குறிப்பிடத்தக்கது. விருதை வாங்கிய பிறகு பேசிய எஸ்கே, 'தனுஷுடன் 13 வருடங்களுக்கு முன்பு இந்த விழாவுக்கு வந்தேன். அப்போது இரண்டாவது வரிசையில் சீட் கொடுத்தார்கள். இப்போது முதல் வரிசையில் சீட் கிடைத்திருக்கிறது. இதற்கு 13 வருடங்கள் ஆகியிருக்கின்றன' என பேசியிருந்தார். எஸ்கே அப்படி பேசியதை வைத்து ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான படம் அமரன். எஸ்கேவின் கரியரையே அப்படம் மாற்றியது. உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. அவரது நடிப்புக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றுக்கொடுத்து. அந்தவகையில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை சிவா பெற்றார். இந்த விருது உட்பட மொத்தம் ஏழு பிலிம்ஃபேர் விருதுகளை அள்ளியது படம்.

சிவகார்த்திகேயன் பேச்சு: இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், " இதுதான் எனக்கு முதல் ஃபிலிம்ஃபேர் விருது. முதன்முறையாக தனுஷுடன் நான் 13 வருடங்களுக்கு முன்பு இந்த விருது விழாவுக்கு வந்தேன். வா சும்மா ஜாலியாக சென்று வரலாம் என அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இப்போது முதல் வரிசையில் சீட் கிடைத்திருக்கிறது. இது கிடைக்க எனக்கு 13 வருடங்கள் ஆகியிருக்கிறது. கோவா திரைப்பட விழாவின்போது அமரன் எனக்கு மேலும் மேலும் கொடுக்கும் என கூறினேன்.
அமரன் கொடுக்கிறது: அதேபோல் அமரன் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜின் குடும்பத்துக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இப்படத்துக்காக நான் கமலின் அலுவலகத்துக்கு சென்றிருந்தபோது அவரது அலுவலகத்தில் ஏகப்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள் இருந்தன. அதை பார்த்தபோது அமரனுக்காக எனக்கும் கிடைக்கும் என நினைத்தேன். அதேபோல் இப்போது கிடைத்திருக்கிறது.
மிதித்தாலும், துவைத்தாலும்: நான் ரொம்பவே சீரியஸான ஆள் எல்லாம் இல்லை. ரொம்பவே ஜாலியான ஆள், அமரன் படத்தை பார்த்துவிட்டு ஏன் இவ்வளவு சீரியஸாக நடித்தாய் என யாருமே கேட்கவில்லை. மாறகா அனைவருமே என்னை பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி. எனது ரசிகர்களுக்கு முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், என்னை எவ்வளவோ பேர் அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை அவர்கள்தான் தொடர்ந்து மேடையில் நிற்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக ரொம்பவும் நன்றி. உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா ஃபிலிம்ஃபேர் விருதோடு நின்றுகொண்டிருக்கிறேன்" என்றார்.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: அவரது இந்த எமோஷனல் பேச்சு அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சிவாவின் இந்தப் பேச்சி பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " துவைத்தது யார்? மிதித்தது யார்? சந்தோஷமான நிகழ்ச்சிகளில்கூட இப்படி பச்சாதாபமாக பேசி அறுப்பது ஏன்? கோலிவுட் ஹீரோக்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை போல" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















