சிவகார்த்திகேயன்தான் சி.எம்.. பிரதீப் ரங்கநாதனும் லிஸ்ட்டில் இருக்காரு.. பிரபலம் அதிரடி
சென்னை: நடிகர் விஜய் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றிருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் விரைவில் ஆட்சியும் அமைக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் இரண்டாவது நடிகர் என்ற பெயரையும் அவர் பெறுகிறார். அனைவருமே அவரது ஆட்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த களேபரங்களுக்கு மத்தியில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசியலுக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர்களில் முதல் ஐவர் மட்டுமே அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து விஜய்யும் சில வருடங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவரால் எல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது என்று பலரும் ஆரூடம் கூறினார்கள்.

கூடிய கூட்டம் செம: விஜய் எங்கே சென்றாலும் அவரை பார்ப்பதற்கு பல லட்சம் பேர் காத்து கிடந்தார்கள். கரூரில் அவரது வருகைக்காக காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த கோர சம்பவம் ஒன்று போதும் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிடும் என்று அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எல்லாம் கூறினார்கள். போதாக்குறைக்கு மனைவி சங்கீதாவும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
தமிழ்நாட்டில் மேஜிக்: ஆனால் அத்தனை கருத்துக்கணிப்புகள், வாய் பேச்சுக்கள், கருத்துக்கள், எண்ணங்கள் என அத்தனையையும் அடித்து நொறுக்கிவிட்டு விஜய் ஒரு மேஜிக் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்டு வந்த கழகங்களை கலகம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வென்றிருக்கிறது. திமுக கூட்டணியால் 73 இடங்களை பிடிக்க முடிந்தது. இந்தத் தேர்தல் திமுகவுக்கும், தவெகவுக்குமான போர் என சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. பல தொகுதிகளில் திமுக Vs தவெக என்ற போட்டி வாக்குகளில் அப்பட்டமாக பிரதிபலித்தது.
காங்கிரஸ் ஆதரவு: விஜய் கட்சி அதிக தொகுதிகளை வென்றிருந்தாலும் 118 என்ற பெரும்பான்மையை பிடிக்க முடியவில்லை. எனவே அதிமுக, காங்கிர, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகளிடம் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி தவெக தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்போதைக்கு தன்னிடம் இருக்கும் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டது காங்கிரஸ். மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய்: ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கும் தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பியிருக்கிறார். அநேகமாக இன்றே ஆதரவு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்துவிடும் என தெரிகிறது. எனவே நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது. கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே; அதுவும் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் ஆவதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அதேசமயம் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு நடிகரின் கைகளுக்கு நாடு சென்றுவிட்டது; என்ன நிலைமைக்கு ஆளாகப்போகிறோமோ என்ற அச்சமும் பலரிடம் இல்லாமல் இல்லை. அதுமட்டுமின்றி திரைத்துறையிலிருந்து வந்து முதலமைச்சராகும் நடிகராக விஜய்தான் கடைசியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்திருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் 2036ஆம் ஆண்டும், பிரதீப் ரங்கநாதன் 2046ஆம் ஆண்டும் முதலமைச்சரவார்கள் என்றும்; பிரதீப் சி.எம் ஆகும்போது தமிழ்நாடு தமிழா நாடு என்று பெயர் மாறியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
