தனிமைப்படுத்தப்பட்ட ரஜினி.. வீட்டுக்கு ஏன் போலீஸ்?.. அமீரின் கேள்வியால் சூப்பர் ஸ்டார் செய்தது தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் கடந்த வருடத்தில் கூலி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், கமல்ஹாசனுடன் ஒரு படம் ஆகியவை அவரது கைகளில் இருக்கின்றன. இந்த மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினியின் வயது இப்போது 75. அவர் இந்த வயதிலும் அசால்ட்டாக படங்களில் நடித்துவருகிறார். அவரது எனர்ஜி கொஞ்சம்கூட குறையவே இல்லை. இருந்தாலும் கடந்த வருடத்தில் வெளியான அவரது கூலி திரைப்படத்தின் தோல்வி கொஞ்சம் அவரை அப்செட் ஆக்கிவிட்டதாம். எனவே அந்தத் தோல்வியை சரிக்கட்டும் விதமாக அடுத்தடுத்த படங்களை தரமாக கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். அடுத்து, ஜெயிலர் 2, தலைவர் 173, கமல்ஹாசனுடன் ஒரு படம் ஆகியவை வரவிருக்கின்றன. இவை மீது அனைவருக்குமே அதீத நம்பிக்கை இருக்கிறது.

ரஜினி மீது வைக்கப்படும் விமர்சனம்: இதற்கிடையே ரஜினிகாந்த்தை தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் தலைவர், சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர் கர்நாடக மாநிலத்தவர் என்பதால்; சிலர் அவரை இன வெறியோடு அணுகுவார்கள். அதற்கு ரஜினியும் பெரும்பாலும் பதில் சொல்வதில்லை. அதேசமயம் அவர் எப்போது பேச ஆரம்பித்தாலும், 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்கள்' என்றே விளிப்பார். அது அவ்வளவு அப்ளாஸை அள்ளும்.
காவிரி பிரச்னை: மேலும் காவிரி நீர் பிரச்னை வந்துவிட்டால் உடனே; ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தவர் என்ற பேச்சுக்கள் எழும். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்புகூட தமிழ்நாடு திரைப்பட கலைஞர்கள் காவிரி நீர் பிரச்னைக்காக சென்னையில் போராட்டம் நடத்தினார்கள். அதில் ரஜினியும் கலந்துகொண்டார்தான். இருப்பினும் போராட்டத்தில் பங்கெடுத்த சத்யராஜ் மறைமுகமாக ரஜினிகாந்த்தை தாக்கி பேசியிருந்தார். அதற்கு ரஜினியும் சூசகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
அமீர் பேட்டி: இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான அமீர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "நான் அடிப்படையில் கமல்ஹாசன் ரசிகன் என்பது ரஜினிக்கும் தெரியும். ஆனால் நானும், அவரும் சந்திக்கையில் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு எங்களுக்கிடையே நடந்துவிடுகிறது. காவிரி பிரச்னையின்போது சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினோம். ரஜினிகாந்த் முதலில் வரவில்லை. சிலர் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக ரஜினியை பெயர் சொல்லாமல் அவர் கர்நாடகக்காரர் என்றே பேசினார்கள். ஆனால் மதியத்துக்கு மேல் வந்து கலந்துகொண்டுவிட்டார்.
நான் சொன்னது; ரஜினி செய்தது: சத்யராஜ் பேசிய பிறகு நான் போய் பேசினேன். அப்போது நான், 'ஒகேனக்கல் என்ற பெயரையே மாற்ற வேண்டும். கன்னடத்தில் பெயர் வைப்பதால்தான் அந்த இடம் அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்துவிட்டார்கள்' என கூறினேன். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த்தை ஏன் தனிமைப்படுத்த வேண்டும். அவரது வீட்டுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு புரியவே இல்லை. நீங்களே ஏன் அடையாளம் காட்ட வேண்டும். எல்லா விஷயத்திலும் அவரை பயன்படுத்திக்கொள்கிறீர்கள். காவிரி பிரச்னை வந்தால் மட்டும் அவரை கன்னடத்துக்காரர் என சொல்கிறார்கள். ஏன் இதெல்லாம் என்று கேட்டேன். உடனே ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அங்கிருந்தே ஃபோன் செய்து தனது வீட்டில் இருந்த காவல் துறையினரை போக சொல்லிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications















