வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்கு கேட்ட சூர்யா... வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சென்னை : வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகர் ஆர்.எஸ்.சூர்யா வீட்டில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும்,வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தர வில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது.
வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் வருமான வரிக்கு மீதமுள்ள வட்டி தொகையை சூர்யா செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய், தனுஷ் ஆகிய டாப் நடிகர்கள் சொகுசு காருக்கு வரி கட்டாத வழக்கில் சிக்கி, ஐகோர்ட்டின் கண்டிப்பிற்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது சூர்யாவும் வரி வழக்கில் சிக்கி, ஐகோர்ட்டின் கண்டிப்பிற்கு ஆளாகி உள்ளார்.
சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எதற்கும் துணிந்தவன் படத்தின் மோஷன் போஸ்டர் சூர்யா ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே சூர்யாவின் தந்தை சிவக்குமார், எதற்கும் துணிந்தவன் என்ற டைட்டிலில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு படம் நடித்துள்ளார். தற்போது அதே டைட்டிலில் மகன் சூர்யாவும் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











