என்னால எல்லாம் அப்படி நடிக்கவே முடியாது.. தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கணும்.. சிலிர்த்த சிரஞ்சீவி!
ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான குபேரா திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக வெளியான குபேரா படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழை குவிந்து வருகின்றன. நடிகர் தனுஷின் நடிப்பை பார்த்து சிலிர்த்துப்போன மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற குபேரா படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று தனுஷை ஆரத்தழுவி வாழ்த்தினார்.

நானெல்லாம் இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்றும் இந்தியாவிலேயே தேவா கதாபாத்திரத்தை கச்சிதமாக கொடுக்கக்கூடிய ஒரே நடிகர் தனுஷ் தான் என்றும் புகழ்ந்து தள்ளியிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடி கோடி கோடி: குபேரா படத்தில் வருவது போலவே கோடி கோடி கோடியாக குபேரா படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்தளவுக்கு படத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ அதைவிட டபுள் மடங்கு வரவேற்பு ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு உள்ளது தான் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. சேகர் கம்முலாவின் இயக்கம், நாகார்ஜுனா, தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு உள்ளிட்டவற்றை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
நடிப்பு அசுரன்: துள்ளுவதோ இளமை படத்தில் அப்பா இயக்கத்தில் அண்ணன் வசனத்தில் நடிக்கத் தொடங்கிய தனுஷ் இன்று ப. பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என தானே இயக்குநராகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். நடிப்பு அசுரனாகவே இந்திய சினிமாவில் இருக்கும் தனுஷ் ஹாலிவுட்டில் கிரேமேன் படத்தில் எல்லாம் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். ஆடுகளம், அசுரன் படங்களை தொடர்ந்து இந்த படத்துக்கும் அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என மெகா ஸ்டார் சிரஞ்சீவி மனதார பாராட்டியுள்ளார்.
சிலிர்த்துப்போன சிரஞ்சீவி: நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற குபேரா படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி பங்கேற்றார். தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பை பார்த்து தான் வியந்து போனதாக பாராட்டினார். "நானெல்லாம் இப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன், எனக்கு இப்படியொரு கதாபாத்திரம் எல்லாம் வந்தால், வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். இந்தியாவிலேயே தேவா கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தக் கூடிய ஒரே ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் மட்டும் தான், கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்" என சிரஞ்சீவி ஆரத்தழுவி பாராட்டியது தனுஷை கண்கலங்க வைத்துள்ளது.
தரமான படம்: குபேரா படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் சிலர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், குபேரா திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம் தான் என்றும் தனுஷின் நடிப்பு மட்டுமே அந்த படம் எந்தளவுக்கு சூப்பரான படம் என்பதை நிரூபித்துக் காட்டும் என ரசிகர்கள் தொடர்ந்து அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் இட்லி கடை படமும் இதைவிட சிறப்பாகவே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











