சீயான் விக்ரமுக்கு இன்றோடு 24 வயசு தான் ஆகுதா?.. ஆமாங்க.. அவரே போட்டுள்ள ட்வீட்டை பாருங்க!
சென்னை: நடிகர் விக்ரம் பிறந்து 57 வருடங்கள் ஆகும் நிலையில், சீயான் விக்ரம் பிறந்து இன்றுடன் 24 ஆண்டுகள் தான் ஆகின்றன. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் என விக்ரமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1990ல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் விக்ரம் தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், மீரா, உல்லாசம், ஹவுஸ்ஃபுல் என தமிழில் பல படங்களும் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களிலும் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு அந்த படங்கள் எல்லாம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

சேது தந்த சீயான்: ஆனால், 1999ம் ஆண்டு பாலா இயக்கத்தில் டிசம்பர் 10ம் தேதி வெளியான சேது படம் தான் சீயான் விக்ரமை தமிழ் சினிமாவில் முழுமையான ஹீரோவாகவும் நடிகனாகவும் மாற்றியது. அந்த படத்தில் கல்லூரி மாணவனாக கம்பீரமாகவும் காதலில் விழுந்த இளைஞனாக படு ரொமான்ட்டிக்காக முதல் பாதியில் வரும் விக்ரம் இரண்டாம் பாதியில் ஆரம்பித்து அந்த கிளைமேக்ஸ் காட்சி வரை மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்து விட்டார்.
24 வருடங்கள் ஆகுது: இந்நிலையில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் என பதிவிட்டு அந்த படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றது என்பதை நினைவு கூர்ந்துள்ளார் விக்ரம். இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த படம் இன்னமும் அவருக்கு ஒரு மைல்கல் படமாகவே உள்ளது.
பாலா இயக்கத்தில்: சேது படத்திற்கு பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் உடல் உழைப்பை மட்டுமின்றி உயிரை கொடுத்து நடிக்க வேண்டும் என புரிந்துக் கொண்ட விக்ரம் பல படங்களில் கடும் ரிஸ்க் எடுத்து நடிப்பு அசுரனாக மாறினார். மீண்டும் பாலா இயக்கத்தில் அவர் நடித்த பிதாமகன் படத்திற்காக தேசிய விருதையும் தட்டித் தூக்கினார்.
மகனை அறிமுகப்படுத்த: தன்னை போலவே தனது மகன் துருவ் விக்ரமையும் பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய சொன்னார். வர்மா எனும் பெயரில் பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி ரீமேக் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், ஆதித்ய வர்மா எனும் பெயரில் அதே படம் கிரிசாயா இயக்கத்தில் வெளியாக துருவ் விக்ரம் அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications











