சத்யம் தியேட்டரில் விக்ரமை சூழ்ந்த ரசிகர்கள்... ஆட்டோவில் ஏறி தப்பித்த வீர தீர சூரன்.. வீடியோ!
சென்னை: வீர தீர சூரன் திரைப்படம் நேற்று காலையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு காரணமாக அந்த படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதன் காரணமாக சியான் விக்ரம் ரசிகர்கள் பல தியேட்டர்கள் முன்பாக பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். ரசிகர் ஒருவருக்கு மண்டை உடைந்த சம்பவமும் நேர்ந்தது.
அனைத்து சட்ட சிக்கல் பிரச்சனைகளும் மாலையில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

தியேட்டர்களில் மாலை காட்சியாக படம் வெளியானதும் படம் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுடன் படத்தை பார்க்க நினைத்த சியான் விக்ரம் சத்யம் தியேட்டருக்கு படக்குழுவுடன் சென்ற நிலையில், சியான் விக்ரமை ஏகப்பட்ட ரசிகர்கள் சூழந்து கொள்ள அவர்களிடம் இருந்து தப்பித்து அவர் ஆட்டோவில் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் முதல் சியான் விக்ரம் வரை: சத்யம் தியேட்டரில் நேற்று மாலை போடப்பட்ட காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை துஷாரா விஜயன், சியான் விக்ரம் உள்ளிட்ட பலர் வந்து பார்த்தனர். திடீரென சினிமா பிரபலங்கள் வந்து சியான் விக்ரமுக்கும் அவரது படத்துக்கும் ஆதரவு அளித்த நிலையில், சியான் விக்ரமை பார்த்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
கூடிய கூட்டம்: ஏற்கனவே சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி எனும் பெண்மணி உயிரிழந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், விக்ரம் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அவரை சூழந்துக் கொண்ட நிலையில், ரசிகர்களிடம் இருந்து தப்பித்து சென்றால் மட்டுமே கூட்ட நெரிசல் குறையும் என்பதை புரிந்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினார் சியான் விக்ரம்.
ஆட்டோவில் ஏறிச்சென்ற விக்ரம்: அவசரத்திற்கு தனது காரில் கூட ஏறிச் செல்லாமல் சியான் விக்ரம் ஆட்டோவில் அங்கே இருந்து ஏறிச் சென்ற காட்சிகள் வீடியோவாக தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. சியான் விக்ரமை நேரில் பார்த்த சந்தோஷத்தில் பல ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர். ரசிகர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அதிக நேரம் அங்கே இருக்காமல் அவர் உடனடியாக கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் புக்கிங் எப்படி?: சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான வீர தீர சூரன் படத்தின் 2ம் பாகத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன. நேற்று மாலை மற்றும் இரவுக் காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லான நிலையில், இன்றும் பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் கணிசமாக அதிகரித்துள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்றும் சியான் விக்ரமுக்கு இந்த படம் வெற்றி படமாக மாறும் என்றும் சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சியான் விக்ரமும் நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கான படத்தை கொடுத்த திருப்தியில் ஹேப்பியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











